உ.பி.யில் நீதிமன்ற வளாகத்தில் வக்கீல் சுட்டுக்கொலை

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  உத்தரப்பிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் மாவட்ட நீதிமன்றம் இயங்கி வருகின்றது. இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் வழக்கறிஞர் புபேந்திர சிங் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்தனர். சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கிருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. சம்பவத்தின்போது வழக்கறிஞர் யாருடனோ பேசிக்கொண்டிருந்ததாகவும் அப்போது திடீரென பயங்கர சத்தம் கேட்டதாகவும் கூறப்படுகின்றது. வழக்கறிஞர் கொலைக்கான காரணங்கள் தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தனது டிவிட்டர் பதிவில்,‘‘நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் வேதனைக்குரியது மற்றும் அவமானத்துக்குரியது. பாஜ ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை  இந்த சம்பவம் எடுத்துகாட்டுகின்றது. உத்தரப்பிரதேசத்தில் யார் தான் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: