முன்விரோத தகராறில் தலையில் வெட்டி வாலிபர் படுகொலை: மர்ம நபர்கள் வெறிச்செயல்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே முன்விரோத தகராறில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். பெரியபாளையம் அருகே வெங்கல் அடுத்த சிவன்வாயில் பகுதியில் சிவன் கோயில் உள்ளது. கோயிலின் அருகே தலையில் வெட்டு காயங்களுடன் வாலிபர் சடலம் கிடப்பதாக வெங்கல் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில், மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமார் மற்றும் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாரதி, வெங்கல் இன்ஸ்பெக்டர் ஜெயவேல்  ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இறந்த நபர் யார் என்று தீவிர விசாரணை நடத்தினர். அதில், சிவன்வாயில் கரையான்மேடு கிராமத்தை சேர்ந்த ஜெகதீசன்(26), திருவள்ளூர் பூங்கா நகர் பகுதியில் சிக்கன் கடை நடத்தி வந்ததும், பின்னர் திருவள்ளூரில் உள்ள பிரபல ஆன்லைன் நிறுவனத்தில் டெலிவரி செய்யும் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. புகாரின்பேரில் வெங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது கள்ளத்தொடர்பு தகராறில் கொலை நடந்ததா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வாலிபரை வெட்டிய மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: