திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் பம்பை ஆற்றில் கடும் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ேகாயில் நடை கடந்த 16ம் தேதி திறக்கப்பட்டது. மறுநாள் முதல் 21ம் தேதி வரை 5 நாட்கள் தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் பம்பை அணை நிரம்பியதை தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பம்பை ஆற்றில் கடும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த 3 நாட்களுக்கும் சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் கூட்டம் நடந்தது. அதில், அடுத்த 3 நாட்களும் சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது.