மேற்கு வங்கத்தில் பாஜ மாவட்ட செயலாளர் சுட்டுக்கொலை

கொல்கத்தா:  மேற்கு வங்க மாநிலத்தில் பாஜவின் இளைஞர் பிரிவு மாவட்ட செயலாளர் மிதுன் கோஷ் மர்மநபர்களால் நேற்று இரவு சுட்டுக்கொல்லப்பட்டார்.  மேற்கு வங்க மாநிலம், இதாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராஜ்கிராம் பகுதியை சேர்ந்தவர் மிதுன் கோஷ். இவர் பாஜ இளைஞர் பிரிவு மாவட்ட செயலாளராக இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் மிதுன் கோஷ் தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென அந்த வழியாக இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் மிதுனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். அவரது வீட்டில் இருந்தவர்கள் மிதுனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே திரிணாமுல் கட்சியை சேர்ந்தவர்கள் தான் மிதுன் கொலைக்கு பின்னணியில் இருப்பதாக பாஜ குற்றம்சாட்டியுள்ளது. மேலும் அவருக்கு பலமுறை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் இதுகுறித்து புகார் செய்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தினஜ்பூர் பாஜ மாவட்ட தலைவர் பசுதேப் சர்கார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Related Stories: