ஜகார்த்தா: ஆக்கஸ் திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்க இருப்பதற்கு இந்தோனேஷியா, மலேசியா நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இணைந்து ஆக்கஸ் எனும் அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த 3 நாடுகளும் இணைந்து, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவுக்கு எதிராக செல்வாக்கை நிலை நிறுத்துவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இதன் மூலம், அணுசக்தி நீர்மூழ்கிக்கப்பல் தொழில்நுட்பம் ஆஸ்திரேலியாவுக்கு வழங்கப்படும். இந்த தொழில்நுட்பத்தில் அமெரிக்க வல்லுநர்களின் உதவியுடன் ஆஸ்திரேலியா 8 அணுசக்தி நீர் மூழ்கிக் கப்பல்களை தயாரிக்கும். அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் பிராந்தியத்தில் ஆஸ்திரேலியாவின் கடல்வழி கண்காணிப்பு தீவிரமடைவதுடன், இக்கூட்டணியின் ராணுவ இருப்பு வலுப்படும்.