சென்னை: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மாநில தலைவர் கு.குமரேசன், பொது செயலாளர் எம்.பி.முருகையன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று 6 மாதம் ஆகியும், இப்பணியில் இரவு பகலாக ஓய்வின்றி பணியாற்றிய அனைத்து நிலை வருவாய்த்துறை அலுவலர்களுக்கும் தேர்தல் மதிப்பூதியம் வழங்கவில்லை. மாவட்ட ஆட்சித் தலைவர் முதல் கிராம உதவியாளர் வரை அனைத்து நிலை அலுவலர்களுக்கும் தேர்தல் மதிப்பூதியம் உடனடியாக வழங்கப்பட வேண்டும். சட்டமன்ற தேர்தல் செலவினம் நிதியை ஒதுக்கி உடனடியாக வழங்க வேண்டும்.
6 சட்டமன்ற தொகுதிகளுக்கு மாவட்டங்களில், நேர்முக உதவியாளர் (தேர்தல்) பணியிடத்தை ஏற்படுத்த வேண்டும். இக்கோரிக்கைகள் தொடர்பாக முதன்மை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகுவை பலமுறை தொடர்ந்து நேரில் சந்தித்து வலியுறுத்தப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்காததால் நவம்பர் 13, 14, 27, 28 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் பணிகனை புறக்கணிப்பது என்ற நிலைக்கு வருவாய்த்துறை அலுவலர்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் பணிகள் பாதிக்காத வகையில் எங்களுடைய கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும். தலைமைச் செயலாளர், முதன்மைத் தேர்தல் அலுவலரும் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.