ஆசிரியர் பணி தேர்வுக்கான வயது வரம்பு உயர்வு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பினை  பொதுபிரிவினருக்கு 40லிருந்து 45 ஆகவும், இதர பிரிவினருக்கு 45லிருந்து  50 ஆகவும் சிறப்பு நிகழ்வாக ஒரு முறை மட்டும் நிர்ணயித்து  ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்ட அரசாணை:

தமிழ்நாடு பள்ளி கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள், தமிழ்நாடு பள்ளி கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைக் கல்வி பணிகளுக்கான சிறப்பு விதிகளை மறுவெளியீடு செய்து ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. சிறப்பு விதிகளில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளில், ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 40 வயது என்றும், இதர பிரிவினருக்கு 45 வயது என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அரசு பணிகளில் நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்ச வரம்பு, தற்போதுள்ள 30 ஆண்டுகளிலிருந்து 32 ஆண்டுகளாக உயர்த்தியும், அதிகபட்ச வயது உச்சவரம்பினை கொண்டுள்ள பதவிகளை பொறுத்தவரையில் தொடர்புடைய பணி விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது உச்ச வரம்பு மேலும் இரண்டு ஆண்டுகள் உயர்த்தியும் ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் தொடர்புடைய பணி விதிகளுக்கு உரிய திருத்தம் மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஆசிரியர் பணி நாடுநர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலை பணி விதிகள், தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணிவிதிகள் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைக் கல்வி பணி விதிகளில் ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பினை பொது பிரிவினருக்கு 40லிருந்து 45 ஆகவும், இதர பிரிவினருக்கு 45லிருந்து 50 ஆகவும் 31.12.2020 வரை சிறப்பு நிகழ்வாக ஒரு முறை மட்டும் நிர்ணயித்து ஆணை வழங்கிட பள்ளிக் கல்வி ஆணையர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார். பள்ளி கல்வி ஆணையரின் கருத்துருவினை அரசு ஆய்வு செய்து ஆணையிடுகிறது.

தமிழ்நாடு தொடக்க கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள், தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைக் கல்வி பணிகளுக்கான சிறப்பு விதிகள் ஆகியவற்றில் முறையே வயது வரம்பிற்கான விதி நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக உச்ச வயது வரம்பினை பொதுப்பிரிவினருக்கு 40லிருந்து 45 ஆகவும், இதர பிரிவினருக்கு 45லிருந்து 50 ஆகவும் உயர்த்தப்படுகிறது.

 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 9.9.2021 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கு இந்த உயர்த்தப்பட்ட உச்ச வயது வரம்பு பொருந்தும். இவ்வாறு உயர்த்தப்படும் உச்ச வயது வரம்பினை 31.12.2022 வரை சிறப்பு நிகழ்வாக ஒரு முறை மட்டும் நிர்ணயிக்கப்படுகிறது.

இந்த உயர்த்தப்பட்ட உச்ச வயது வரம்பு 31.12.2022 வரை வெளியிடப்படும் பள்ளிக் கல்வி துறையின் கீழ் உள்ள ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான அறிவிக்கைகளுக்கு பொருந்தும். ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பினை 1.01.2023 முதல் பொதுப்பிரிவினருக்கு 42 ஆகவும், இதர பிரிவினருக்கு 47 ஆகவும் நிர்ணயிக்கப்படுகிறது. சிறப்பு விதிகளுக்கான உரிய வரைவு விதித் திருத்தங்களை உடன் அரசுக்கு அனுப்பி வைக்குமாறு பள்ளி கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு  அரசாணையில் கூறப்பட்டுள்ளது. ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக  நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பு, பொது பிரிவினருக்கு 40லிருந்து 45 ஆகவும், இதர பிரிவினருக்கு 45லிருந்து 50 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Stories: