சம்பா பருவ பயிர்களுக்கான இழப்பீட்டு தொகையாக 6 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,597 கோடி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழகத்தில் 2020-2021ம் ஆண்டில், பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் குறுவை, சம்பா மற்றும் குளிர்கால பருவ பயிர்கள் 42.75 லட்சம் ஏக்கர் பரப்பளவு பயிர் காப்பீடு செய்வதற்காக, 25.76 லட்சம் விவசாயிகள் பதிவு செய்தனர். குறுவை (காரீப்) பருவத்துக்கான இழப்பீட்டு தொகையாக ரூ.133.07 கோடி, 2,02,335 விவசாயிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. 2021-22ம் ஆண்டில் பயிர்காப்பீட்டு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்காக ரூ.2,327 கோடி நிதியை, 2021-22ம் வேளாண் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், 2020-2021ம் ஆண்டு சம்பா பருவ பயிர்களுக்கான தமிழ்நாடு அரசின், பயிர் காப்பீட்டு கட்டண மானியமாக ரூ.1553.15 கோடி, காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.

இதன் காரணமாக, 2020-2021ம் ஆண்டு சம்பா பருவ பயிர்களுக்கு (சம்பா நெற்பயிர் உட்பட) இழப்பீட்டு தொகையான ரூ.1597.18 கோடியில், இப்கோ-டோக்யோ பொது காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் ரூ.1,089.53 கோடியும், இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் ரூ.507.65 கோடியும், சுமார் 6 லட்சம் விவசாயிகளுக்கு தற்போது ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான இந்த இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்ட 6 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கிடும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் 10 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையினை வழங்கி தொடங்கி வைத்தார்.

Related Stories: