சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கு ஆந்திராவில் பதுங்கி இருந்த மீஞ்சூர் வாலிபர் சிக்கினார்

தண்டையார்பேட்டை: சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில், ஆந்திராவில் பதுங்கி இருந்த மீஞ்சூர் வாலிபரை போலீசார் கைது செய்தனர். ராயபுரம் பழைய ஆடுதொட்டி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை கடந்த மாதம் 28ம் தேதி காணவில்லை என்று சிறுமியின் பெற்றோர் ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையில், சிறுமிக்கு, மீஞ்சூரை சேர்ந்த விஜயகுமார் (எ) விஜய் (20)  என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியதும், அவர் ஆசை வார்த்தை கூறி, சிறுமியை வேளச்சேரி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததும், பின்னர் அன்று இரவு சிறுமியை கொண்டு வந்து, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு சென்றதும் தெரியவந்தது.

சிறுமி, அங்கிருந்து ஆட்டோவில் ராயபுரம் வந்துள்ளார். அங்கு, ஏற்கனவே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான பழைய ஆடுதொட்டி சாலையை சேர்ந்த இளையராஜாவை பார்த்துள்ளார். அவர், வண்ணாரப்பேட்டை மாடன் லைன் பகுதியை சேர்ந்த தனது நண்பர் கணேசன் (20) வீட்டுக்கு சிறுமியை அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார். அப்போது, கணேசனும் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார் என தெரியவந்தது. அவர்களிடம் இருந்து சிறுமியை மீட்ட ராயபுரம் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் இளையராஜா, கணேசன் ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவான விஜய், ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் பெரிய வேட்டு காலனியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் ஆந்திர மாநிலம் சென்று விஜயை கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: