ஆன்லைன் ரம்மியில் ரூ.2 லட்சம் இழப்பு: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த பி.மாத்தூரை சேர்ந்தவர் சேகர்.  விவசாய தொழிலாளி. இவரது மகன் அருண்(21). சேலத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் உடற்கல்வி பயின்று இந்தாண்டு முடித்தார். கடந்த சில மாதங்களாக ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி ஆயிரக்கணக்கில் பணத்தை அருண் இழந்தார். மேலும் நண்பர்களிடமும் ஆயிரக்கணக்கில் கடன் வாங்கி ரம்மி விளையாட்டை தொடர்ந்து விளையாடி வந்தார். இழந்த பணத்தை எப்படியும் மீட்டு விடலாம் என்ற நம்பிக்கையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.2 லட்சத்துக்கு மேல் இழந்துள்ளார்.

இந்நிலையில் கொடுத்த பணத்தை நண்பர்கள் கேட்டு தொல்லை கொடுத்து வந்தனர். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் மன உளைச்சலில் இருந்த அருண் நேற்று முன்தினம் இரவு வீட்டின்  அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த சம்பட்டிவிடுதி போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: