பாலியல் வழக்கில் 20 ஆண்டுகள் சிறைவாசம் உள்ள சாமியார் குர்மீத் ராம் ரஹீம்க்கு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை!!

சண்டிகர் : தேரா சச்சா ஆசிரமத்தின் மேலாளர் ரஞ்சித் சிங் கொலை வழக்கில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம்க்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலம் சிர்சாவில் தேரா சச்சா சவுதா ஆசிரமம் உள்ளது. இதன் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், பெண் துறவிகள் 2 பேரை பலாத்காரம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதற்கிடையில் கடந்த 2002-ம் ஆண்டு தேரா சச்சா ஆசிரமத்தின் மேலாளர் ரஞ்சித் சிங் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆசிரமத்தில் நடக்கும் முறைகேடுகள் குறித்து ‘பூரா சச்’ என்ற பெயரில் எழுதப்பட்ட கடிதம் பத்திரிகைகளில் வெளியானது. இதன் பின்னணியில் ரஞ்சித் சிங் இருந்ததால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கில் குர்மீத் ராம், கிருஷ்ணலால், ஜஸ்பீர் சிங், சப்தில் சிங், இந்திரசேனா உட்பட பலர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கிலும் ராம் ரஹீம் மற்றும் 4 பேர் குற்றவாளி என நீதிபதி சுஷில் கார்க் தீர்ப்பளித்தார்.மேலும் குர்மீத் ராம் ரஹீம் உட்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குர்மீத் ராம் ரஹீம்க்கு ரூ. 31 லட்சம் அபராதமும் மற்ற 4 பேருக்கு ரூ. 50,000 அபராதமும் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே  2 பெண் பக்தர்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் 20 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

Related Stories: