4 நாட்கள் தொடர் விடுமுறையால் ஊட்டியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்: நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி

ஊட்டி:  ஆயுதபூைஜ, விஜயதசமி என 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக பல மாதங்களுக்கு பின் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. படகு இல்லத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சுற்றுலா தலங்கள் நிறைந்த நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக சுற்றுலா தொழில் பாதிப்படைந்துள்ளது. ஊரடங்கு தளர்விற்கு பின் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது, ஊட்டியில் 2வது சீசன் நிலவி வருகிறது. இதனை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக, தேனிலவு தம்பதியரின் வருகை அதிகரித்துள்ளது. இதனால், ஊட்டியில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் கூட்டம் காணப்படுகிறது. ஆயுதபூைஜ, விஜயதசமி மற்றும் வார விடுமுறை நாட்கள் என 4 நாட்கள் தொடர் விடுமுறை, கர்நாடகாவில் தசரா விடுமுறை காரணமாகவும் பல மாதங்களுக்கு பின் ஊட்டியில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.  

சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக ஊட்டியில் உள்ள பெரும்பாலான லாட்ஜ், காட்டேஜ்களில் அறைகள் அனைத்தும் நிரம்பியது. ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களான தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்ட பெட்டா காட்சிமுனை உள்ளிட்டவைகள் களைகட்டின. இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட சற்று அதிகமாக காணப்பட்டது. ஊட்டி நகரில் கமர்சியல் சாலை, எட்டின்ஸ் சாலை, பூங்கா சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று பகலில் பனிமூட்டத்துடன் கூடிய இதமான காலநிலை நிலவிய நிலையில், அதனை அனுபவித்த படியே சுற்றுலா தளங்களை சுற்றி பார்த்தனர்.  

ஊட்டி வந்த சுற்றுலா பயணிகள் ஊட்டி ஏரியில் உள்ள படகு இல்லத்தில் இருந்து படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டினார்கள். இதனால், நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி மேற்கொண்டனர். இதேபோல், மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள முதுமலை, சூட்டிங்மட்டம், அவலாஞ்சி, தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.

Related Stories: