ஊட்டி: ஆயுதபூஜை விடுமுறை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் சுற்றுலா பயணிகள் ஊர் திரும்பியதால் குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறையை முன்னிட்டு 4 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை வந்தது. இதனால், விடுமுறையை கொண்டாடும் வகையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டி வந்தனர். அதற்கேற்றார் போல் ஊட்டியில் இதமான காலநிலை நிலவி வந்தது. சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக சுற்றுலா தலங்கள் களைகட்டின.
ஊட்டி வந்த பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வாகனங்கள் மூலம் வந்ததால் ஊட்டி நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே, ஞாயிற்றுகிழமை விடுமுறை நாளான நேற்றும் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தொடர் விடுமுறை நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், ஊட்டி வந்த சுற்றுலா பயணிகள், ஊர் திரும்ப துவங்கியதால் ஊட்டி-குன்னூர் சாலை, கோத்தகிரி சாலை, ஊட்டி-கோத்தகிரி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மலை பாதைகளில் வாகனங்கள் ஊர்ந்தவாறே ெசன்றன.