திருவண்டார்கோவில்-கொத்தபுரிநத்தம் சாலையில் மெகா சைஸ் பள்ளம்: விபத்துக்குள்ளாகும் வாகனங்கள்

திருபுவனை: புதுச்சேரி மாநிலம், திருவண்டார்கோவிலில் இருந்து கொத்தபுரிநத்தம் செல்லும் சாலை 3 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. இந்த சாலை வழியாக ஒரு நாளைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. திருபுவனை தொழிற்பேட்டைக்கு அடிக்கடி கனரக வாகனங்கள் சென்று வருவதால் சாலைகள் மிகவும் மோசமடைந்து காணப்படுகிறது. சாலை நடுவே மிகப்பெரிய பள்ளம் இருப்பதால் வாகனங்கள் அடிக்கடி அதில் விழுந்து விபத்துகள் ஏற்படுகின்றன.

மழை நேரங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்குவதால் பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து இதுவரைக்கும் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பள்ளத்தில் மண் கொட்டி மூடும் எண்ணம் கூட இல்லை என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், சாலையில் உள்ள பள்ளங்களை போர்க்கால அடிப்படையில் மூடி விபத்துகளை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: