கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

* சோயா பீன்ஸ் பருப்புக்களை உளுந்துக்கு பதிலாக போட்டு ஆட்டி இட்லி சுட்டால் இட்லி அருமையாக இருக்கும். உடம்புக்கும் நல்லது.

* ஜவ்வரிசியை வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு அடை, வடை, தோசை செய்யும்போது சிறிது ஜவ்வரிசி மாவு சேர்த்து செய்தால் மொறுமொறுவென்றிருக்கும்.

* ஜாங்கிரி செய்யும்போது, பத்து ஜாங்கிரியை தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு, மேலே தயிர் ஊற்றி, கொஞ்சம் உப்பு போட்டு ஊற வைத்துச் சாப்பிட்டுப் பாருங்களேன். சூப்பர் ருசி!

* தக்காளி சட்னி செய்யும்போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும்.

*மாதுளம் பூவை பாலில் போட்டு கொதிக்க வைத்து பூ வெந்ததும் எடுத்துவிட்டு ஆறியதும் பாலில் சிறிது தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் அருந்தவும். இதுபோல தொடர்ந்து எட்டு நாட்களுக்கு அருந்தினால் வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்.

*பருப்பு ரசம் நுரையுடன் பொங்கி வரும்போது கொத்தமல்லித் தழையை உடனே போடாமல் அடுப்பிலிருந்து கீழே இறக்கி, ஐந்து நிமிடம் தாமதித்து ரசத்தில் கிள்ளிப் போட்டால் மல்லி அதன் பசுமை மாறாமல் ரசம் கமகமவென்று வாசனையுடன் இருக்கும்.

* சமையலுக்கு உபயோகிக்கும் பெருங்காயத்தை  முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் அந்த பெருங்காய நீரை உபயோகித்தால் மணம் சீராக அமையும் பெருங்காயமும் குறைவாக செலவாகும்.

* அடைக்கு அரைக்கும்போது பருப்பு அரிசியுடன் கொஞ்சம் புளியும் சேர்த்து அரைத்தால் அதன் ருசியே தனி.

* டீ தயாரிக்கும்பொழுது டீ தூளுடன் ஐந்து புதினா இலைகளைப் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் பித்தம் நீங்கும்.

*பூக்கள் வாடாமல் இருக்க, பாலித்தீன் கவரில் போட்டு, அதில் உள்ள காற்றினை வெளியேற்றிவிட்டு, எவர்சில்வர் அல்லது டப்பர்வேர் டப்பாவில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்தால் இரண்டு நாள் வரை வாடாமல் இருக்கும்.

* ரோஜா பூக்களை வாஸ்து பாத்திரத்தில் நீர் ஊற்றி மிதக்கவிடும் போது, பூவின் நடு இதழிலும் ஒரு சொட்டு தேங்காய் எண்ணெய் விட்டால் இதழ்கள் உதிராமல் இருக்கும்.

* ஒரு கப் நல்லெண்ணெயை சூடாக்கி, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் ஓமம், இரண்டு வெற்றிலை, சிறிய வில்லை அளவு கற்பூரத்தை நசுக்கி சேர்த்து, மறுபடியும் சூடு செய்து வைக்கவும். மறுநாள் இந்த எண்ணையை தலைக்கு தேய்த்து 20 நிமிடங்கள் ஊற விட்டு குளித்தால் ஜலதோஷம் பிடிக்காது, புத்துணர்வும் கிடைக்கும்.

* வெண்ணெய் பாக்கெட்டை இரவு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் போட்டு வைத்தால், வெண்ணெய் கையிலோ, பேப்பரிலோ ஒட்டாமல் வரும். மேலும் வெண்ணெய் காய்ச்சி இறக்கியதும் அதில் சிறிது வெந்தயத்தைப் போட்டு வைத்தால், நெய் வாசனையாக இருக்கும்.

* இட்லிக்கு அரிசி ஊற வைக்கும்போது அரிசியோடு ஐந்தோ, ஆறோ சோயா பீன்ஸை ஊறவைத்து அரைத்தால் இட்லி மல்லிப்பூப் போல் மிருதுவாக இருக்கும்.

*காய்கறி, பருப்பு, ரசம் இவற்றிற்கு அளவாக நீரைச் சேர்த்து கொதிக்க விடவும். வெந்தபிறகு நீரை வடித்தால் அதில் உள்ள சத்துக்கள் வீணாகி விடும். அப்படி நீரை வடித்தால் அந்த வடிநீரை குழம்பு, கூட்டு இவற்றில் சேர்த்து விடவும்.

* பால் லேசாகத் திரிந்துவிட்டால், அதில் சிறிது சமையல் சோடா சேர்த்து கலந்து உறையூற்றவும். கெட்டித் தயிராகிவிடும்.

* குளிர்காலத்தில் தயிர் எளிதில் உறையாது. பாலை ஒரு ஹாட்பாக்ஸில் ஊற்றி, உறையூற்றி மூடி வைத்துவிட்டால் மூன்று மணி நேரத்தில் உறைந்துவிடும்.

* பொரித்தெடுத்த ஜாமூனை சூடான சர்க்கரைப் பாகில் போட்டு ஊற வைக்காமல் நன்கு ஆறிய சர்க்கரைப் பாகில் சேர்த்தால் ஜாமூன் விரியாமல், கரையாமல், உடையாமல் சுவையாக இருக்கும்.

* தேன்குழல், சீடை ஆகியவற்றைச் செய்யும்போது மாவை வெந்நீர் ஊற்றிப் பிசைந்தால் எத்தனை நாளானாலும் நமத்துப் போகாது.

* வெள்ளரிக்காய் சூப் தயாரிக்கும்போது வெள்ளரிக்காயை நறுக்கி மிக்ஸியில் போட்டு அடித்துச் சேர்த்தால் நன்றாக இருக்கும்.

* வாழைப்பழம், ஆப்பிள் போன்ற பழங்களில் மில்க் ஷேக் செய்யும்போது கொஞ்சம் வெண்ணெய் போட்டு செய்தால் மில்க் ஷேக் நன்றாக நுரைத்துக் கொண்டு வரும்.

Related Stories: