வலங்கைமான்: வலங்கைமான் பேரூராட்சி அலுவலகம்முன்னதாக பழைய வட்டாட்சியர் அலுவலம்எதிரே செயல்பட்டு வந்த நிலையில் நகரின் மையப்பகுதியில் கடைவீதியில் சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்னர் அதிமுக ஆட்சியில் புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது. அப்போது தேங்கிய கல் மண் மற்றும் கழிவுகளை அலுவலகம் அருகே உள்ள காலியிடத்தில் சுமார் 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் சுமார் 15 அடி உயரத்திற்கு செயற்கை மலைபோல குவித்து வைத்திருந்தனர். கடந்த 8 ஆண்டுகாலமாக இந்த தேவையற்ற மண்குவியலை பேரூராட்சி நிர்வாகம் அப்புறப் படுத்த நடவடிக்கை எடுக்காததால் தற்போது இந்த மண்குவியல் மீது செடிகள் கொடிகள் புல் பூண்டுகள் மற்றும் மரங்கள் வளர்ந்துள்ளது.
இதனால் பகல்வேளையில் கூட பேரூராட்சி அலுவலகத்திற்கு செல்லும் பொதுமக்கள் பேரூராட்சி அலுவலக கட்டிடத்திற்கு எதிரே 20 அடி தொலைவில் உள்ள இந்த இடத்தை கடக்கும்போது அச்சத்துடன் செல்லும் சூழ்நிலை உள்ளது .வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் நீதிமன்றம் நூலகம், ஊட்டச்சத்து அலுவலகம் உதவி தொடக்க கல்வி அலுவலகம் உள்ளிட்டவை கட்டுவதற்கு உரிய நிதி இருந்தும் அதற்கான போதிய இடம் இல்லாததால் பல ஆண்டுகளாக சொந்த கட்டிடம் இல்லாமல் வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகின்றது. மேலும் வணிகர்கள் அப்பகுதிகளில் உள்ள வணிகர்கள் வலங்கைமான் பேரூராட்சிஅலுவலகம் உள்ள பகுதியில் கட்டண கழிப்பிடங்கள் அமைக்க பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வரும் நிலையில் அக் கோரிக்கையும் தொடர்ந்து நிராகரிக்கப்படுகிறது.
பேரூராட்சிக்கு சொந்தமான பூங்கா அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளில் இந்தத் தேவையற்ற மண் திட்டுகளை கொட்டி சமன் செய்ய வேண்டும். இப்பிரச்சனை மீது உரிய நடவடிக்கை எடுக் கப்படாவிட்டால் வலங்கைமான் பேரூராட்சி அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த வேண்டிய சூழல் உள்ளது என பொதுமக்கள் சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.