சம்பா பருவப் பயிர்களுக்கான ரூ.1,597.18 கோடி இழப்பீட்டுத் தொகையை சுமார் 6 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கும் பணி :முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: சம்பா பருவப் பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையான 1,597.18 கோடி ரூபாயை சுமார் 6 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (அக். 18) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வேளாண்மையில் தொடர் வளர்ச்சியானது ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும். உணவுப் பாதுகாப்புடன் கிராமப்புற விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், அவர்களுக்குத் தொடர் வருமானம் கிடைத்திடவும், மாநில அளவில் நிலையான பொருளாதார வளர்ச்சி அடைவதற்கும் வேளாண்மையில் நீடித்த வளர்ச்சியை ஏற்படுத்துவது மிகவும் இன்றியமையாததாகும்.

இதனைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தின் வரலாற்றிலேயே முதல் முறையாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசால் வேளாண்மைத் துறைக்கென 2021-22ஆம் ஆண்டிற்கான தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதுமட்டுமின்றி, வேளாண்மைத் துறை என்ற பெயரை வேளாண்மை - உழவர் நலத்துறை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, இயற்கை வேளாண்மையை ஊக்குவித்து நிலையான வேளாண் வளர்ச்சிக்கு வழிவகுத்து வருகிறது.

2020-2021ஆம் ஆண்டில், பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் குறுவை, சம்பா மற்றும் குளிர்காலப் பருவப் பயிர்கள் 42.75 லட்சம் ஏக்கர் பரப்பளவு பயிர்க் காப்பீடு செய்வதற்காக, 25.76 லட்சம் விவசாயிகள் பதிவு செய்தனர். குறுவை (காரீப்) பருவத்துக்கான இழப்பீட்டுத் தொகையாக ரூ.133.07 கோடி, 2,02,335 விவசாயிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது.

முதல்வர் தலைமையிலான அரசால், நிதி நெருக்கடியான சூழ்நிலையிலும் தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, 2021-22ஆம் ஆண்டில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவதற்காக ரூ.2,327 கோடி நிதியை, 2021-22 ஆம் வேளாண் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், 2020-2021ஆம் ஆண்டு சம்பா பருவப் பயிர்களுக்கான தமிழக அரசின் பயிர்க் காப்பீட்டுக் கட்டண மானியமாக ரூ.1,553.15 கோடி, காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.

இதன் காரணமாக, 2020-2021ஆம் ஆண்டு சம்பா பருவப் பயிர்களுக்கு (சம்பா நெற்பயிர் உட்பட) இழப்பீட்டுத் தொகையான ரூ.1,597.18 கோடியில், இப்கோ-டோக்யோ பொது காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் ரூ.1,089.53 கோடியும், இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் ரூ.507.65 கோடியும், சுமார் 6 லட்சம் விவசாயிகளுக்குத் தற்போது ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கான இந்த இழப்பீட்டுத் தொகையை பாதிக்கப்பட்ட 6 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கிடும் விதமாக முதல்வர் இன்று 10 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்கி தொடங்கி வைத்தார்.

மேலும், 2021-2022ஆம் ஆண்டு சம்பா பருவப் பயிர்களைக் காப்பீடு செய்ய 26.08.2021 அன்று தமிழக அரசால் 16.08.2021ஆம் நாளிட்ட வேளாண்மை - உழவர் நலத்துறை அரசாணை (டி) எண்.141-ல் ஆணை வெளியிடப்பட்டு, விவசாயிகள் சம்பா பருவப் பயிர்களுக்கான காப்பீட்டுக் கட்டணத்தை (பிரீமியத்தை) செப்டம்பர் 15-ம் தேதி முதல் செலுத்தி வருகின்றனர்.

13.10.2021 வரை, 61871 விவசாயிகளால் பயிர்க் காப்பீடு செய்யப் பதிவு செய்யப்பட்டு, 67,556 ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளின் நலனுக்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பதிவு செய்து தங்கள் பயிரைக் காப்பீடு செய்து கொள்ளுமாறு முதல்வர் விவசாயிகளைக் கேட்டுக்கொண்டார்.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: