திண்டுக்கல்லில் பலத்த மழை: வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கடந்த ஒரு வாரமாக வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் மேலடுக்கு சுழற்சி காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் மதியத்திற்கு மேல் திடீரென்று இடி மின்னலுடன் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது.

திண்டுக்கல், பேருந்து நிலையம், குள்ளனம்பட்டி, ரெட்டியபட்டி, பேகம்பூர், சீலப்பாடி, பாலக்கிருஷ்ணாபுரம்‌ அனுமந்த நகர் உள்ளிட்ட பகுதிகளில் ‌உள்ள சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. 2 மணி நேர மழையின் காரணமாக குளிர்ச்சியான காற்று வீசியது. இதேபோல், நந்தவனப்பட்டி, தாடிக்கொம்பு, அகரம் உள்ளிட்ட திண்டுக்கல் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது.

இதில் பழனி ரோடு, தாடிக்கொம்பு ரோடு, மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருச்சி ரோடு, முருக பவனம், ஆர்எம் காலனி சாலைகளில், மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள பால திருப்பதி நகரில் உள்ள குடிசை வீடுகளுக்குள் மழைநீருடன் கலந்து, சாக்கடை கழிவுநீர் புகுந்ததால், பெண்கள் தண்ணீரை பாத்திரங்களில் எடுத்து வெளியே ஊற்றினார்.

Related Stories: