சார்ஜ் போட்டிருந்த போது செல்போன் தீப்பிடித்து கல்லூரி மாணவர் பலி

கோவை: கோவை மதுக்கரை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி (57). கூலி தொழிலாளி. இவரது மகன் சிவராம் (18). கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர், கடந்த 10ம் தேதி நள்ளிரவில் கட்டில் மெத்தை மீது செல்போன் வைத்து சார்ஜ் போட்டு கொண்டிருந்தார்.

அப்போது செல்போன் சார்ஜிங் ஒயரில் ஏற்பட்ட பழுதின் காரணமாக மெத்தையில் தீ பிடித்தது. தீ வேகமாக பரவியதை கவனிக்காமல் தூங்கிய சிவராம் உடையில் தீ பிடித்தது.

வலி தாங்காமல் இவர் கதறிய போது பக்கத்து அறையில் தூங்கிய மயில்சாமி மற்றும் குடும்பத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து சிவராமை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில், சிவராம் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்தார். இது தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். செல்போன் வெடித்து அதன் மூலமாக படுக்கையில் தீ பரவியதாக தகவல் வெளியானது. ஆனால் வெடிக்கவில்லை. தீ பரவியதில் செல்போனும் எரிந்து நாசமாகி விட்டது. செல்போன் சார்ஜர் ஒயர் பழுதாகி விட்டதை கவனிக்காமல் பஞ்சு மெத்தையில் நீண்ட நேரம் சார்ஜர் போட்டதால் இந்த விபரீதம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: