வனவிலங்குகளை வேட்டையாட தயாரிக்கப்பட்டது நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் வீடு இடிந்து 3 பேர் படுகாயம்

தண்டராம்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த நவம்பட்டு அருகே உள்ள இருதயபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அமிர்தராஜ். இவரது மகன்கள் லியோ பெனிக்ஸ்(25). அலெக்ஸாண்டர்(23). இவர்களது உறவினர் மகன் ஜான் போஸ்கோ(35). இவர்கள் 3 பேரும் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நேற்று முன்தினம் நள்ளிரவு நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாரவிதமாக திடீரென வெடிகுண்டு வெடித்தது. இதில் வீட்டின் சுவர்கள் இடிந்து, மேற்கூரையும் சரிந்து விழுந்தது.

மேலும் வீட்டின் தகர ஷீட் தூக்கி வீசப்பட்டது. இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். பயங்கர சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்த அக்கம்பக்கத்தின் வீடு இடிந்து 3 பேர் படுகாயமடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து பொதுமக்கள், தச்சம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

Related Stories: