திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் புதிய மேல்சாந்தியாக பரமேஸ்வரன் நம்பூதிரியும், மாளிகைபுரம் மேல்சாந்தியாக சம்புவும் தேர்வு செய்யப்பட்டனர். ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நேற்று முன்தினம் மாலை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்தார். தொடர்ந்து வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. நேற்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து காலை 8 மணிக்கு சன்னிதானத்தில் புதிய மேல்சாந்திகள் தேர்வு நடந்தது.
ஏற்கனவே, நேர்முக தேர்வு மூலம் சபரிமலை, மாளிகைபுரத்திற்கு தலா 9 பேர் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். இவர்களில் தலா ஒருவர் குலுக்கல் மூலமாக புதிய மேல்சாந்திகளாக தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, குலுக்கல் நடைபெற்றது. இதில் சபரிமலை மேல்சாந்தியாக ஆலப்புழா மாவட்டம், மாவேலிக்கரையை சேர்ந்த பரமேஸ்வரன் நம்பூதிரியும், மாளிகைப்புரம் மேல்சாந்தியாக கோழிக்கோட்டை சேர்ந்த சம்பு நம்பூதிரியும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் மண்டல கால பூஜைகளுக்காக நடை திறக்கப்படும் நவம்பர் 15ம் தேதி பொறுப்பேற்பார்கள்.ஓராண்டுக்கு இவர்கள்தான் சபரிமலையில் பூஜைகளை நடத்துவார்கள்.