மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகளால் போக்குவரத்து நெரிசல்: சிக்கி தவித்த பொதுமக்கள்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் சுற்றுலா தலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், ஏராளமான வாகனங்கள் வெளியேற முடியாமல் ெபாதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிக்கித் தவித்தனர். மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றி பார்க்க உள்நாட்டு பயணிகள் ஏராளமானோர் கார், வேன், தனியார் பஸ்களில் தங்களது குடும்பத்தோடு வந்திருந்தனர். இதனால், மாமல்லபுரம் முக்கிய வீதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. மேலும், புராதன சின்னங்களை கண்டு ரசித்து குடும்பம், குடும்பமாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

ஏராளமான சுற்றுலா வாகனங்கள் வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வெளியேற முடியாமல் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து நின்றதால் உள்ளூர் மக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியது. நேற்று காலையில், இருந்து மதியம் வரை குறைந்த பயணிகளே காணப்பட்டனர். மாலை 4 மணிக்கு மேல் ஏராளமான வாகனங்களில் பயணிகள் வந்தனர். இந்நிலையில், கடற்கரைக்கு செல்ல தடை இருப்பதால், தடையை மீறி ஏராளமான பயணிகள் கடற்கரைக்கு செல்ல முயன்றனர்.

அப்போது, கடற்கரைக்கு செல்லும் பாதையை தடுப்புகள் வைத்து அடைத்து மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் நடராஜன், வருவாய் ஆய்வாளர் ஜேம்ஸ், பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் பயணிகளை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதனால், கடற்கரை ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Related Stories: