நகைக்கடை ஊழியர்களை மிரட்டி 4 கிலோ வெள்ளி கொள்ளை: காரில் வந்த கும்பலுக்கு வலை

துரைப்பாக்கம்: நகைக்கடை ஊழியர்களை கத்திமுனையில் மிரட்டி 4 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர். புதுச்சேரியில் உள்ள பிரபல நகைக்கடையில் ஆறுமுகம் (55) என்பவர் ஊழியராகவும், மணிகண்டன் (40) என்பவர் இந்த கடையில் கார் ஓட்டுனராக வேலை செய்கின்றனர். இவர்கள், நேற்று முன்தினம் பாரிமுனையில் இருந்து, தாங்களது கடைக்கு 30 கிலோ வெள்ளி பொருட்களை வாங்கிக் கொண்டு, காரில் புதுச்சேரி புறப்பட்டனர். முன்பக்க இருக்கையில், 4 கிலோ வெள்ளி பொருட்களையும், பின்பக்க இருக்கையில் 26 கிலோ வெள்ளி பொருட்களையும் வைத்திருந்தனர்.

இவர்கள், கிழக்கு கடற்கரை சாலை பனையூர் அருகே சென்றபோது,  காரை நிறுத்திவிட்டு அங்குள்ள ஓட்டலில் சாப்பிட்டனர். அப்போது மற்றொரு காரில் இவர்களை பின் தொடந்து வந்த மர்ம கும்பல் ஒன்று, கார் முன்பக்க, பக்கவாட்டு கண்ணாடியை உடைத்து, உள்ளே இருந்த 4 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்தனர். இதை பார்த்த ஆறுமுகம் மற்றும் மணிகன்டன், அந்த மர்ம கும்பலை தடுக்க முயன்றனர். அப்போது, அந்த கும்பல், இருவரையும் கத்தியை காட்டி மிரட்டிவிட்டு, 4 கிலோ வெள்ளி பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு, காரில் ஏறி தப்பி சென்றது. இதுகுறித்து, கார் டிரைவர் மணிகண்டன் கானத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

Related Stories: