சாத்தாங்காடு பிரதான சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

திருவொற்றியூர்: சாத்தாங்காடு பிரதான சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கடைகள் மற்றும் விளம்பர பலகைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலம், 12வது வார்டுக்கு உட்பட்ட சாத்தாங்காடு பிரதான சாலையை ஆக்கிரமித்து கடைகளின் முகப்பு மற்றும் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு இருந்தன. இதனால், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது. எனவே, இவற்றை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் சார்பில், மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில், திருவொற்றியூர் மண்டல அலுவலர் பால் தங்கதுரை, செயற்பொறியாளர் உசேன், உதவி செயற்பொறியாளர் ஆனந்தராவ் மற்றும் உதவி பொறியாளர்கள் நேற்று சாத்தாங்காடு சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 25க்கும் மேற்பட்ட கடைகள், முகப்புகள் மற்றும் விளம்பர பலகைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர். அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இதுபோன்ற ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

Related Stories: