அதிமுக பொன் விழா கொண்டாட்டத்தின்போது ரூ.1 லட்சம் திருட்டு: ஆந்திரா வாலிபர் கைது

சென்னை: சென்னை ராயப்பேட்டை அவ்வைசண்முகம் சாலையில், அதிமுக தலைமை அலுவலகம் உள்ளது. அதிமுகவின் 50வது பொன்விழா ஆண்டு நேற்று தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இதனால், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து  கொண்டனர். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி வாலிபர் ஒருவர் அதிமுக பிரமுகர் சக்திவேல் என்பவரிடம் ரூ.40 ஆயிரம் மற்றொரு அதிமுக பிரமுகரிடம் ரூ.60 ஆயிரம் பணம் திருடியுள்ளார்.

அதோடு இல்லாமல் அலுவலகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த லோக கண்ணன் என்பவரின் பைக்கும் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட அதிமுக பிரமுகர்கள் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். அதில், ஆந்திரா மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த பழைய குற்றவாளி ஸ்ரீராம்(26) என்பதும், அவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதைதொடர்ந்து ஸ்ரீராமுவை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

Related Stories: