தொடர் விடுமுறை எதிரொலி: ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

ஊட்டி: தொடர் விடுமுறை காரணமாக ஊட்டியில் 3 நாட்களில் 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கடந்த இரு மாதங்களாக ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வரத் துவங்கியுள்ளனர். தற்போது ஆயுத பூஜை, வார விடுமுறை மற்றும் கர்நாடக மாநிலத்தில் தசரா பண்டிகை விடுமுறை வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.  ஒன்றரை ஆண்டுக்கு பின் ஊட்டிக்கு கடந்த 3 நாட்களில் 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இதனால், ஊட்டி நகரின் பல்வேறு சாலைகளிலும் நேற்று வாகன நெரிசல் காணப்பட்டது.

மேலும், சுற்றுலா தலங்களுக்கு செல்லும் சாலைகள், நடைபாதைகள் என எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் நேற்று குவிந்தனர். அதேபோல், சாலையோரங்களில் உள்ள காய்கறி கடைகள், கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளிலும் மக்கள் கூட்டம் காணப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். தற்போது ஊட்டியில் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் சுற்றுலா தலங்கள் களை கட்டியுள்ளது.

Related Stories: