தண்ணீரில் தத்தளிக்கும் கடவுளின் தேசம்; கேரளாவை புரட்டிப்போட்ட கனமழை, பெருவெள்ளத்தால் இதுவரை 18 பேர் உயிரிழப்பு: மீட்பு பணிகள் தீவிரம்..!

திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. அரபிக்கடலில் குறைந்த  காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து கடந்த 2 தினங்களாக  கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால்  முல்லை பெரியாறு, இடுக்கி உள்பட பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இடுக்கி அணை உச்சத்தை எட்டி வருவதால் முதல் கட்ட நீல எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் மாநிலம் முழுவதும் பலத்த  மழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் விடிய விடிய மழை பெய்தது.

இதனால், தாழ்வான பகுதிகளில்  வெள்ளம் புகுந்துள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்   திட்டா, மலப்புரம், கோழிக்கோடு உள்பட 11 மாவட்டங்களுக்கு  நேற்று கனமழைக்கான ஆரஞ்சு  எச்சரிக்கையும், மற்ற மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும்   விடுக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று பகல் கோட்டயம் மாவட்டம், கூட்டுகல் அருகே பிலாபள்ளி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 3 வீடுகள் மண்ணில் புதைந்தன. வீடுகளில் 13 பேர் இருந்திருக்கலாம்என்று கருதப்படுகிறது. அனைவரும் மண்ணில் புதைந்தனர். அந்த பகுதியினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், 9 பேர் சடலங்கள் மீட்கப்பட்டன. மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

கோட்டயம் மற்றும் இடுக்கியில் 2 பெண்களும், ஒரு குழந்தையும் இறந்தனர். இது போல தொடுபுழா அருகே அரக்குளம் ஆற்றுப்பாலத்தில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் சிக்கிய கார், அடித்துச் செல்லப்பட்டது. இதில் காரில் இருந்த பெண் உள்பட 2 பேர் பலியானார்கள். இதில் பெண்ணின் உடல் காணியாந்தோடு பகுதியில் மீட்கப்பட்டது. அவருடன் இருந்தவரின் உடலை தேடும் பணி நடக்கிறது. பத்தனம்திட்டா பகுதியிலும் மழைக்கு 2 பேர் பலியானார்கள். இவர்களையும் சேர்த்து மழைக்கு இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

Related Stories: