சிவகாசி பட்டாசு தொழிலை காப்பாற்ற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கோரிக்கை

சென்னை: சிவகாசியில் பசுமை பட்டாசுகள் மட்டுமே தயாரிக்கப்படுகிறது,  இதன்மூலம் காற்று மாசு ஏற்படாது என்பதை மற்ற மாநிலங்களுக்கு  தெளிவுபடுத்தி பட்டாசு தொழிலை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:  டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான், அரியானா போன்ற மாநிலங்களில் இந்த ஆண்டு தீபாவளி பட்டாசு விற்பனைக்கு தடை விதித்துள்ளது. பட்டாசு தொழிலில் ஈடுபட்டிருப்போர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனி மனிதனின் வாழ்வில் மட்டும் இன்ப ஒளி நிறைந்தால் போதாது. மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் தீப ஒளிகள் ஏற்றப்பட வேண்டும். தீபாவளி என்பது எழைகளுக்கும் கைக்கெட்டும் கனியாக சிறந்து விளங்க வேண்டும் என்ற தத்துவத்தை பட்டாசு தொழிலில் ஈடுபட்டிருப்போரும் பெற வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த எதிர்பார்ப்பினை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான், அரியானா மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். ஆனால் இதற்கு அந்த மாநிலங்கள் செவிசாய்க்குமா என்பது தெரியவில்லை.

எனவே முதலமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, சிவகாசியில் பசுமை பட்டாசுகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்ற என்பதையும், இதன்மூலம் காற்று மாசு ஏற்படாது என்பதையும் தொலைபேசி மூலமோ அல்லது அமைச்சர்களை நேரில் அனுப்பியோ உண்மை நிலையை அந்தந்த மாநிலங்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அந்த மாநிலங்களில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையினை நீக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: