ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணையத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை:  தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணையத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூகப் பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மாநில அளவில் ஆதி திராவிடர்கள், பழங்குடியினர் ஆகியோருடைய சட்டபூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுடைய முக்கியமான பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும், ‘தமிழ்நாடு ஆதி திராவிடர்- பழங்குடியினர் நல ஆணையம்’ என்கிற புதிய அமைப்பு ஒன்றைத் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் வகையில் உருவாக்கிட உரிய சட்டம் இயற்றப்படும் என்று  முதல்வர் மு.க.ஸ்டாலினால் சட்டமன்றப் பேரவையில் அறிவிக்கப்பட்டு, அதற்கான உரிய சட்டமும் இயற்றப்பட்டுள்ளது.

அதன்படி அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, ‘தமிழ்நாடு ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நல ஆணையத்திற்கு’ தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து முதல்வர்  மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் சிவக்குமார் தலைவராகவும், புனிதப் பாண்டியன் துணைத் தலைவராகவும் நியமிக்கப்படுகின்றனர். மேலும் வழக்கறிஞர் குமாரதேவன், எழில் இளங்கோவன், லீலாவதி தனராஜ், வழக்கறிஞர் இளஞ்செழியன் மற்றும் முனைவர் கே. ரகுபதி ஆகியோர் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆணையத்தின் தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டு காலம் ஆகும். இந்த ஆணையம் ஆதி திராவிடர்கள், பழங்குடியினர் ஆகியோருடைய சட்டபூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுடைய முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் உரிய ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் அரசுக்கு அவ்வப்போது வழங்கும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: