ஆற்றை தூய்மைப்படுத்திய 11 மாணவர்கள் மூழ்கி பலி: இந்தோனேஷியாவில் சோகம்

ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் ஆற்றை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த 21 மாணவர்கள் நீரில் அடித்து செல்லப்பட்டனர். இதில் 10 பேர் மீட்கப்பட்டனர். மற்றவர்கள் பலியாகினர். இந்தோனேஷியா நாட்டின் மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள இஸ்லாமிய பள்ளி ஒன்றில் இருந்து ஒருநாள் சுற்றுலாவுக்கு ஆற்றை சுத்தப்படுத்தும் பணிக்கு 150 மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். இவர்கள் சிலியூர் ஆற்றின் கரைப் பகுதியில், தண்ணீரில் தவறி விழுந்து விடாமல் இருக்க கைகளைக் கோர்த்து சுத்தப்படுத்தி கொண்டிருந்தனர்.

அப்போது, ஒரு மாணவன் திடீரென தண்ணீரில் தவறி விழுந்து விட, அவனது கைகளை பிடித்து கொண்டு நின்றிருந்த அடுத்தடுத்த மாணவர்கள் என மொத்தம் 21 மாணவர்கள் ஆற்றில் விழுந்தனர்.  இவர்களில் 10 மாணவர்கள் மீட்கப்பட்டனர். மற்ற 11 மாணவர்கள் ஆற்றில் மூழ்கினர். அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

நிலநடுக்கம் 3 பேர் பலி

இந்தோனேஷியாவின் பாலி தீவில் நேற்று அதிகாலை ஏற்பட்ட நில நடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவானது. துறைமுக நகரான சிங்கராஜா பகுதியில் இதன் மையம் இருந்தது. இதனால், மலைப்பகுதி மாவட்டம் ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். கரங்காசெம் பகுதியில் வீடு இடிந்து விழுந்ததில் 3 வயது சிறுமி பலியானாள். மீண்டும் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கங்களினால் ஏற்பட்ட உயிர், பொருட்சேதம் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

Related Stories: