ஸ்ரீநகர்: காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் லஷ்கர் இ தொய்பா கமாண்டர் உள்பட 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் தொடர் தாக்குதல், தீவிர தேடுதல் வேட்டையினால் எரிச்சல் அடைந்துள்ள தீவிரவாதிகள், தங்கள் கவனத்தை அப்பாவி பொதுமக்கள் மீது திருப்பி உள்ளனர். கடந்த வாரத்தில் மட்டும் 7 பேரை அவர்கள் சுட்டு கொன்றனர். இதனால், தீவிரவாதிகள் மீதான வேட்டையை பாதுகாப்பு படைகள் தீவிரப்படுத்தி உள்ளன. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் பாதுகாப்பு படையை சேர்ந்த 5 வீரர்களை தீவிரவாதிகள் கொன்றனர்.
இதனிடையே, ரகசியத் தகவலின் அடிப்படையில் தேடுதல் வேட்டையை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். அதன்படி, பாம்போர், புல்வாமா பகுதிகளில் நேற்று தேடுதல் பணி முடுக்கி விடப்பட்டது. அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சரமாரியாக சுட்டனர். வீரர்களும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இதில், புல்வாமாவில் நடந்த துப்பாக்கி சண்டையில், லஷ்கர் இ தொய்பா கமாண்டர் உமர் முஸ்தாக் காண்டே சுட்டுக் கொல்லப்பட்டான். இவன், ஸ்ரீநகரில் ராணுவ வீரர்கள் முகமது யூசுப், சுகைல் ஆகியோரை கொன்றது உள்பட பல்வேறு தாக்குதல்களில் தொடர்புடையவன்.