புதுடெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல் நலம் குறித்து விசாரிக்க ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று முன்தினம் சென்றார். அப்போது, தங்களின் விருப்பத்தையும் மீறி அவருடன் புகைப்பட கலைஞரையும் அழைத்து சென்றதாக மன்மோகன் சிங்கின் மகள் தாமன் சிங் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், மன்மோகன் சிங்கின் உடல் நலம் குறித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில், `மருத்துவ சோதனைகளின் மூலம் மன்மோகன் சிங்குக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. ஆனால், ரத்த தட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், அவரது உடல்நிலையில் சீரடைந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது,’ என்று கூறப்பட்டுள்ளது.