கொளத்தூர் தொகுதியில் 560 பயனாளிகளுக்கு ரூ.2.87 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: கொளத்தூர் தொகுதியில் 560 பயனாளிகளுக்கு ரூ.2.87 கோடி  மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், அரசு புறநகர் மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக அவசரகால ஊர்தியை முதல்வர் மு.க.ஸ்டாலின்  வழங்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கொளத்தூர்  சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எவர்வின் பள்ளியில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், 16 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், 5 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி, 2 பயனாளிகளுக்கு வங்கி கடன் மானியம், 5 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள், 197 பயனாளிகளுக்கு முதியோர், கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகள்,  சாலை விபத்தில் உயிரிழந்த  குடும்பத்தைச் சேர்ந்த 312 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி, 5 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி, கொரோனா தொற்றால் பெற்றோரில் ஒருவரை இழந்த 18 குழந்தைகளுக்கு நிவாரண நிதி என மொத்தம் 560 பயனாளிகளுக்கு ரூ.2.87 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  

அதனைத் தொடர்ந்து, கொளத்தூர், பெரியார் நகர் மேம்படுத்தப்பட்ட அரசு புறநகர் மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சார்பில் வழங்கப்பட்ட ஒரு அவசரகால ஊர்தியையும், கொரோனா தடுப்பூசி பணிக்காக 2 வாகனங்களின் சேவைகளையும் முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்து, 210 பேர் அமரக்கூடிய மூன்று இருக்கைகள் கொண்ட 70 நாற்காலிகளையும் மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக வழங்கினார். பின்னர் கொளத்தூர், ஜி.கே.எம்.காலனியில் உள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர், 70 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி, 34 ஆசிரியர்களுக்கு சிறப்பு செய்தார்.

மேலும், அப்பள்ளிக்கு கட்டிடம் கட்டுவதற்காக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சார்பில் ரூ.1 கோடிக்கான காசோலையை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் கே.வி.ராமமூர்த்தி முதல்வரிடம் வழங்கினார். அத்துடன் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சார்பில் 1500 மாணவர்கள் அமரும் வகையில் ரூ.25 லட்சம் மதிப்பில் அளிக்கப்பட்ட மேஜைகள் மற்றும் நாற்காலிகளையும் பள்ளியின் பயன்பாட்டிற்காக வழங்கினார்.  

இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை கலெக்டர் விஜயராணி, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் இயக்குநர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கலைஞரின் வருமுன் காப்போம் கீழ் சிறப்பு மருத்துவ முகாம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திரு.வி.க. நகர் மண்டலம்,  கொளத்தூர் பள்ளி சாலையில் உள்ள சென்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுமக்களின் உயிர்காக்கும் திட்டமான கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

முகாமில் 35 மருத்துவர்கள், 60 செவிலியர்கள், 3 மருந்தாளுநர்கள், 20 மருத்துவ ஊழியர்கள் மற்றும் 4 தொழில்நுட்ப வல்லுநர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். இம்முகாம் மூலம் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெறுவார்கள். பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் மண்டலத்திற்கு ஒரு முகாம் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படும்.

Related Stories: