வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை தீவிரம் தமிழகத்தில் உள்ள 90 அணைகளின் நீர் மட்டம் கிடுகிடு உயர்வு

* பவானிசாகர் உட்பட 5 அணைகள் நிரம்பியது

* 4 அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது

* நீர்வளத்துறை உயர் அதிகாரி தகவல்

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள 90 அணைகளின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால், அணைகளில் 24 மணி நேரம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் நீர்வளத்துறை கட்டுபாட்டில் 90 அணைகள் உள்ளது. இதன் மூலம் தான் மாநிலத்தில் குடிநீர், பாசன ேதவைகளை பூர்த்தி செய்து வருகிறது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், அணைகளின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

குறிப்பாக, 93 டிஎம்சி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் 51.5 டிஎம்சியாகவும், 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையில் 30 டிஎம்சியாகவும், 4 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அமராவதி அணையில் 3.23 டிஎம்சியாகவும், 10.5 டிஎம்சி கொள்ளளவு கொண்ட முல்லை பெரியாறு அணையில் 4.4 டிஎம்சியாகவும், 6 டிஎம்சி கொள்ளளவு கொண்ட வைகை அணையில் 2.8 டிஎம்சியாகவும், 5.5 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 3.4 டிஎம்சியாகவும், 5.5 டிஎம்சி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 1.3 டிஎம்சியாகவும், 4.3 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் 3.7 டிஎம்சியாகவும், 2.8 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 2.5 டிஎம்சியாகவும், 1.6 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணகிரி அணையில் 1.5 டிஎம்சியாகவும், 7.3 டிஎம்சி கொள்ளளவு கொண்ட சாத்தனூர் அணையில் 2.9 டிஎம்சியாகவும், 5.04 டிஎம்சி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையில் 5 டிஎம்சியாகவும், 13.4 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பரம்பிகுளம் அணையில் 13 டிஎம்சியாகவும், 3.8 டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணையில் 3 டிஎம்சியாகவும், 1.7 டிஎம்சி கொள்ளளவு கொண்ட திருமூர்த்தி அணையில் 0.76 டிஎம்சி என மொத்தம் 224 டிஎம்சி கொள்ளளவு கொண்ட 90 அணைகளில் 146.77 டிஎம்சியாக உள்ளது.

தற்போது 65.44 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளின் நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. தற்போது கிருஷ்ணகிரி, பவானிசாகர், பரம்பிகுளம், சோலையாறு, ஆழியாறு ஆகிய 5 அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், அந்த அணைகளின் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதே போன்று அமராவதி, பாபநாசம், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால், அணைகள் 24 மணி நேரம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அணைகளில் 5 அடி முதல் 10 அடிக்கு குறைவாகவே நீரை தேக்கி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே பெரும்பாலான அணைகள் நிரம்பி விடும் என்பதால், அதன் மூலம் கிடைக்கும் நீரை சேமித்து வைக்க நீர்வளத்துறை ஆலோசித்து வருகிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: