சென்னை: தமிழகத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறாது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, தமிழகத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாமை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்த தமிழக அரசு முடிவு செய்தது.
அதன்படி தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 12ம் தேதி 40 ஆயிரம் இடங்களில் 28.91 லட்சம் பேருக்கும், 19ம் தேதி 20 ஆயிரம் இடங்களில் 16.43 லட்சம் பேருக்கும், 26ம் தேதி 23 ஆயிரங்களில் 25.04 லட்சம் பேருக்கும், கடந்த 3ம் தேதி 20 ஆயிரம் இடங்களில் 17.19 லட்சம் பேருக்கும், கடந்த 10ம் தேதி 32 ஆயிரம் இடங்களில் 22.52 லட்சம் பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் 6-வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற இருந்த நிலையில் பண்டிகை காலம் என்பதாலும், தொடர் விடுமுறை இருப்பதாலும் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலாத்தலங்களுக்கும் சென்றுள்ளனர். இந்த நேரத்தில் முகாம் நடத்தினால் பொதுமக்களின் வருகை மிகவும் குறைவாக இருக்கும். அதனால் இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை முகாம் நடத்தப்படவில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.