பண்ருட்டி: பண்ருட்டி அருகே நத்தம் கிராமத்தில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் கடந்த 30 வருடத்திற்கு முன்பு 45 வீடுகள் கட்டப்பட்டது. ஏழை எளிய மக்களுக்கே இந்த வீடுகள் வழங்கப்பட்டிருந்தது. அவ்வப்போது பழுது ஏற்பட்டால் பழுது நீக்கம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே பெரும்பாலான வீடுகளும் மேற்புறம் காரைகள் பெயர்ந்து, கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. ஒரு சிலர் தங்கள் மீது சிமெண்ட் காரைகள் விழுந்துவிடுமோ என்ற பயத்தில் வீட்டின் வெளியே வந்து தூங்குகின்றனர். ஒரு வீட்டில் கட்டிடத்தின் மேல் உயிரை பறிக்கும் வகையில் கம்பிகள் தொங்குகின்றன. 45 குடும்பத்தை சேர்ந்தவர்கள் மழை காலங்களில் வீட்டின் உள்ளே தூங்க முடியாமல் உயிருக்கு பயந்து மழையில் நனைந்தபடியே வெளியே தங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.