திருப்பூர்: திருப்பூரில் செவ்வந்தி பூக்கள் எதிர்பார்த்த அளவிற்கு விற்பனையாகாததால் வியாபாரிகள் பூக்களை குப்பையில் வீசி சென்றுள்ளனர்.திருப்பூரில் பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த தொழில்களில் பணியாற்ற வெளி மாநிலம், வெளி மாவட்டங்களிலும் இருந்து தொழிலாளர்கள் வந்து தங்கி பணியாற்றி வருகின்றனர். நவராத்திரி பண்டிகையின் முக்கிய நிகழ்வாக ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தொழில் நிறுவனங்கள், வீடுகளை சுத்தம் செய்து பொரி, சுண்டல் போன்றவைகளை சாமிக்கு படையலிட்டு, செவ்வந்தி பூ சாட்டி வழிபாடு செய்வது வழக்கம். இதனால் பல்வேறு பகுதியிலிருந்து செவ்வந்தி பூக்கள் அதிகளவில் திருப்பூருக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. நேற்று முன்தினம் ஆயுத பூஜை கொண்டாடப்பட்ட நிலையில் செவ்வந்தி பூ ஒரு கிலோ ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்டது.