சிறையில் இருக்கும் மகனுக்கு மணியார்டர் அனுப்பினார் நடிகர் ஷாருக்கான்

மும்பை: மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் போதை பொருட்களை பயன்படுத்தி பார்ட்டி நடப்பதாக போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. கடந்த 3ம் தேதி கப்பலில் சாதாரண பயணிகள் போல் சென்று நடத்தப்பட்ட திடீர் சோதனையில், பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்பட 8 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து, தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பிறகு அனைவரும் கைது செய்யப்பட்டனர். ஆர்யன் கான் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரும் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. ஆர்யன் கான் தொடர்ந்து போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர் என்று போதை பொருள் அமைப்பு கூறியது. கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங், ஆர்யன் கான் கடந்த சில ஆண்டுகளாக போதை பொருள் பயன்படுத்தி வருகிறார் என்று நீதிமன்றத்தில் சொல்லி, அதற்குரிய ஆதாரங்களை சமர்ப்பித்தார். இதையடுத்து ஜாமீன் மனு மீதான உத்தரவு 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆர்யன் கான், அங்குள்ள கேன்டீனில் செலவழிப்பதற்காக அவரது குடும்பத்தினர் 4,500 மணியார்டர் அனுப்பியுள்ளனர். இத்தொகைக்கு மேல் அனுப்ப அனுமதி கிடையாது. இத்தகவலை சிறை கண்காணிப்பாளர் நிதின் வேச்சல் தெரிவித்துள்ளார்.

Related Stories: