போலி மருத்துவர் மீண்டும் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (47). இவர் பி.எஸ்.சி படித்துள்ளார்.  இந்நிலையில் பூண்டி பஜாரில் ஸ்ரீ மெடிக்கல்ஸ் என்ற பெயரில் மெடிக்கல் ஷாப் வைத்து நடத்தி வந்துள்ளார். மிகவும் பின்தங்கிய கிராமமான பூண்டியில் உடல் நிலை சரியில்லை என்று சொன்னால் மருந்து, மாத்திரை தருவதை வாடிக்கையாக்கிய சீனிவாசன்,  காலப் போக்கில் தான் ஒரு மருத்துவர் என்று சொல்லி உடல் நிலை பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு அலோபதி மருத்துவம் பார்த்து மருந்து மாத்திரை வழங்குவதுடன் ஊசியும் போட்டு வந்துள்ளார்.   

இது குறித்த புகாரின் பேரில் கடந்த 27.9.19 அன்று சுகாதாரத் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளியே வந்த சீனிவாசன் மீண்டும் அலோபதி மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இது குறித்து பூண்டி கிராம மக்கள் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு புகார் தெரிவித்தனர். அவரது உத்தரவின் பேரில் புல்லரம்பாக்கம் போலீசார் போலி மருத்துவர் சீனிவாசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே சுகாதார துறையினரால் கைது செய்யப்பட்ட இவர் மீண்டும்  கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: