பிஎன்பி பாரிபா ஓபன் அரையிறுதியில் ஆஸ்டபென்கோ: மெட்வதேவ் அதிர்ச்சி தோல்வி

இண்டியன் வெல்ஸ்: பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, லாத்வியா வீராங்கனை ஜெலனா ஆஸ்டபென்கோ தகுதி பெற்றார். காலிறுதியில்  அமெரிக்காவின் ஷெல்பி ரோஜர்ஸுடன் (44வது ரேங்க்) மோதிய ஆஸ்டபென்கோ (29வது ரேங்க்)  6-4, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் போராடி வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 15 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு காலிறுதியில்   பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா (32வது ரேங்க்) 6-4, 6-2 என நேர் செட்களில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை (24வது ரேங்க்) வீழ்த்தினார்.  இப்போட்டி ஒரு மணி, 34 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

ஆன்ஸ் ஜெபர் (14வது ரேங்க், துனிசியா) தனது காலிறுதியில் 7-5, 6-3 என நேர் செட்களில்    எஸ்டோனியாவின் அனெட் கோன்டவெய்ட்டை (20வது ரேங்க்) வீழ்த்தினார்.  ஜெர்மனி நட்சத்திரம் ஏஞ்சலிக் கெர்பருடன் (15வது ரேங்க்) மோதிய பவுலா படோசா (27வது ரேங்க்) 6-4, 7-5 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதி ஆட்டங்களில் அசரென்கா-ஆஸ்பென்கோ, ஆன்ஸ் ஜெபர் - பவுலா படோசா மோத உள்ளனர். கிரிகோர் அசத்தல்: ஆடவர் ஒற்றையர் பிரிவில்  பல்கேரிய வீரர் கிரிகோர்  திமித்ரோவ் (26வது ரேங்க்)  தொடர்ந்து முன்னணி வீரர்களை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

காலிறுதிக்கு முந்தைய 4வது சுற்றில் ரஷ்ய வீரர்  டானில் மெத்வதேவை (2வது ரேங்க்)  4-6, 6-4, 6-3 என்ற செட்களில் கிரிகோர் வீழத்தினார். அடுத்து காலிறுதியில்  போலந்து வீரர் ஹூபர்ட் ஹர்காக்சை (12வது ரேங்க்) 3-6, 6-4, 7-6 (7-2) என்ற செட்களில் போராடி வென்றார். மற்றொரு காலிறுதியில்  அர்ஜென்டினா வீரர் டியகோ ஷ்வார்ட்ஸ்மன் (15வது ரேங்க்) 0-6, 2-6 என நேர் செட்களில் இங்கிலாந்தின் கேமரான் நோரியிடம் (26வது ரேங்க்) அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். அரையிறுதியில் திமித்ரோவ் - கேமரான் மோதுகின்றனர்.

Related Stories: