இண்டியன் வெல்ஸ்: பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, லாத்வியா வீராங்கனை ஜெலனா ஆஸ்டபென்கோ தகுதி பெற்றார். காலிறுதியில் அமெரிக்காவின் ஷெல்பி ரோஜர்ஸுடன் (44வது ரேங்க்) மோதிய ஆஸ்டபென்கோ (29வது ரேங்க்) 6-4, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் போராடி வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 15 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு காலிறுதியில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா (32வது ரேங்க்) 6-4, 6-2 என நேர் செட்களில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை (24வது ரேங்க்) வீழ்த்தினார். இப்போட்டி ஒரு மணி, 34 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
ஆன்ஸ் ஜெபர் (14வது ரேங்க், துனிசியா) தனது காலிறுதியில் 7-5, 6-3 என நேர் செட்களில் எஸ்டோனியாவின் அனெட் கோன்டவெய்ட்டை (20வது ரேங்க்) வீழ்த்தினார். ஜெர்மனி நட்சத்திரம் ஏஞ்சலிக் கெர்பருடன் (15வது ரேங்க்) மோதிய பவுலா படோசா (27வது ரேங்க்) 6-4, 7-5 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதி ஆட்டங்களில் அசரென்கா-ஆஸ்பென்கோ, ஆன்ஸ் ஜெபர் - பவுலா படோசா மோத உள்ளனர். கிரிகோர் அசத்தல்: ஆடவர் ஒற்றையர் பிரிவில் பல்கேரிய வீரர் கிரிகோர் திமித்ரோவ் (26வது ரேங்க்) தொடர்ந்து முன்னணி வீரர்களை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.