பெரம்பூர்: கொடுங்கையூர் எருக்கஞ்சேரி ஜி.என்.டி சாலையில் கடந்த புதன் கிழமை இரவு 7 மணிக்கு கொடுங்கையூர் போக்குவரத்து உதவி ஆய்வாளர் வெற்றிவேந்தன் மற்றும் காவலர் கணபதி ஆகிய இருவரும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்தபோது, அதில் கருப்பு நிற பிளாஸ்டிக் பைகளில் 10 பார்சல்கள் இருந்தன. சந்தேகத்தின் பேரில் அதனை பிரித்து பார்த்தபோது, கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் என தெரிந்தது. உடனடியாக இதுகுறித்து கொடுங்கையூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜனுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த அவர், காரில் இருந்த 2 பேர் மற்றும் பணத்தை மீட்டு காவல் நிலையம் கொண்டு வந்தார். தகவலறிந்து, புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா காவல் நிலையம் வந்து விசாரணை மேற்கொண்டார். அதில், ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த ஷேக் பியாஸ் (21), கோபால் ராம் (24) என தெரியவந்தது. அவர்களிடமிருந்த 10 பார்சல்களையும் பிரித்து பார்த்தபோது, ரூ.1 கோடியே 54 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது. மேலும் விசாரணையில், சவுகார்பேட்டை பகுதியில் உள்ள கடையில் நகை வாங்குவதற்காக இந்த பணத்தை கொண்டு செல்வதாக தெரிவித்தனர். ஆனால், அவர்களிடம் உரிய ஆவணம் இல்லாததால், இதுகுறித்து வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.