ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ஆவணம் இன்றி காரில் கொண்டு வரப்பட்ட ரூ.1.5 கோடி பறிமுதல்

பெரம்பூர்: கொடுங்கையூர் எருக்கஞ்சேரி ஜி.என்.டி சாலையில் கடந்த புதன் கிழமை இரவு 7 மணிக்கு கொடுங்கையூர் போக்குவரத்து உதவி ஆய்வாளர் வெற்றிவேந்தன் மற்றும் காவலர் கணபதி ஆகிய இருவரும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்தபோது, அதில் கருப்பு நிற பிளாஸ்டிக் பைகளில் 10 பார்சல்கள் இருந்தன. சந்தேகத்தின் பேரில் அதனை பிரித்து பார்த்தபோது, கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் என தெரிந்தது. உடனடியாக இதுகுறித்து கொடுங்கையூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜனுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த அவர், காரில் இருந்த 2 பேர் மற்றும் பணத்தை மீட்டு காவல் நிலையம் கொண்டு வந்தார். தகவலறிந்து, புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா காவல் நிலையம் வந்து விசாரணை மேற்கொண்டார். அதில், ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த ஷேக் பியாஸ் (21), கோபால் ராம் (24) என தெரியவந்தது. அவர்களிடமிருந்த 10 பார்சல்களையும் பிரித்து பார்த்தபோது, ரூ.1 கோடியே 54 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது. மேலும் விசாரணையில், சவுகார்பேட்டை பகுதியில் உள்ள கடையில் நகை வாங்குவதற்காக இந்த பணத்தை கொண்டு செல்வதாக தெரிவித்தனர். ஆனால், அவர்களிடம் உரிய ஆவணம் இல்லாததால், இதுகுறித்து வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை புலனாய்வு அலுவலக உதவி இயக்குனர் ராஜா மனோகர், வருமான வரித்துறை புலனாய்வு அதிகாரி பாலச்சந்திரன் ஆகியோர், நேரில் வந்து பிடிபட்ட இருவரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது, பணத்திற்கு உரிய ஆவணங்கள் இருப்பதாகவும், அது ஆந்திராவில் இருப்பதால் கொண்டு வந்து காண்பிக்கிறோம் என தெரிவித்துள்ளனர். ஆனால், 2 நாட்கள் ஆகியும் எந்த ஒரு ஆவணத்தையும் கொண்டு வராததால், பிடிபட்ட 2 பேர் மீதும் ஜாமினில் வரக்கூடிய பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர்.

 மேலும், பிடிப்பட்ட பணத்தை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதாகவும், தகுந்த ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறை என்பதால் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் பணம் ஒப்படைக்கப்பட உள்ளது. அதுவரை கொடுங்கையூர் காவல்நிலையத்தில் பணம் வைக்கப்பட்டது. அதிகளவில் பணம் சிக்கி இருப்பதால், கொடுங்கையூர் காவல் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: