எய்ம்ஸ் தகவல் மன்மோகன் உடல்நிலையில் முன்னேற்றம்

புதுடெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங்(89) உடல்நலக் குறைவு காரணமாக கடந்த புதன்கிழமை இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லேசான காய்ச்சல், நெஞ்சு எரிச்சலால் அவர் பாதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. கடந்தாண்டு ஏப்ரலில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, இதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். கடந்த 2009ல் அவருக்கு இதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.

தற்போது அவர், எய்ம்ஸ் மருத்துவமனையின் இருதயவியல் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘மன்மோகன் சிங்கை மருத்துவக் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அவருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு,  சீராக இருக்கிறது,’ என கூறப்பட்டுள்ளது. ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மருத்துவமனைக்கு சென்று மன்மோகனின் உடல்நிலையை விசாரித்தனர்.

Related Stories: