சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுகவின் பொன்விழாவை கொண்டாட செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்க தலைமை கழக நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் தலையை கழகத்தில் சிறப்புற நடைபெற்றது. எம்.ஜி.ஆர் 1972-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் நாள் ‘அதிமுக’ என்ற இயக்கத்தைத் தொடங்கியபோது ஏற்பட்ட அரசியல் எழுச்சியும், புத்துணர்ச்சியும் இன்றும் தொடர்வது எல்லையில்லா மகிழ்ச்சி அளிக்கிறது. அதிமுக தொடங்கப்பட்டதன் 50-ம் ஆண்டு விழாவை தமிழ்நாட்டிலும், கழக அமைப்புகள் செயல்பட்டு வரும் பிற மாநிலங்களிலும், பின்வரும் வகைகளில் ஆண்டு முழுவதும் கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் வளர்ச்சிக்காக தொண்டாற்றும் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள், கலைத் துறையினர் உள்ளிட்டோருக்கு இந்த பொன்விழா ஆண்டு முதல், பெரியார். அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது பெயர்களில் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும்.