கோவா: எல்லையில் அத்துமீறினால் இனி பேச்சுவார்த்தை கிடையாது என்றும் surgical strike எனப்படும் துல்லிய தாக்குதல் மூலம் உடனுக்குடன் பதிலடி தரப்படும் பாகிஸ்தானை இந்தியா எச்சரித்துள்ளது. கோவா மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்க பா.ஜனதா விருபும்கிறது. இந்த நிலையில் பா.ஜனதா முக்கிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா நேற்று கோவா மாநிலம் சென்றிருந்தார்.
கோவாவில் தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா, முன்பெல்லாம் எல்லையில் ஏதாவது தாக்குதல் நடத்தினால் தாக்குதலை நிறுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறினார். பாகிஸ்தானுடன் எந்த பேச்சுவார்த்தையும் பலன் தராத நிலையில் தற்போது எல்லையில் அத்துமீறினால் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என அவர் தெரிவித்தார்.
surgical strike எனப்படும் துல்லிய தாக்குதல் மூலம் உடனுக்குடன் பதிலடி தரப்படும் எனவும் எச்சரித்தார். எல்லையில் பிரச்சனை ஏற்படுத்த முயற்சித்தால் அதை வேடிக்கை பார்க்க முடியாது என்றும், தீவிரவாதிகளுக்கு அவர்களுக்கு புரியும் மொழியிலேயே பாடம் கற்றுத்தரப்படும் என்றும் அவர் கூறினார். இந்தியாவை சீண்டினால் நினைத்து பார்க்க முடியாத அளவில் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்றும் எச்சரித்தார்.