மும்பை: மும்பையில் 5 நிமிடங்களுக்கு ஒரு மோனோ ரயில் இயக்க திட்டமிடப் பட்டுள்ளதாக எம்எம்ஆர்டிஏ (மும்பை பெருநகர் மண்டல மேம்பாட்டு ஆணையம்) அதிகாரிகள் தெரிவித்தனர்.தற்போது செம்பூர்-சாந்த் கட்கே மகாராஜ் சவுக் இடையே வடலா வழியாக 20 கிலோ மீட்டருக்கு மோனோ ரயில் இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் 18 நிமிடங்களுக்கு ஒரு முறை ரயில் இயக்கப்படுகிறது. போதிய ரயில்கள் இல்லாததே இதற்கு காரணம். இதனால் பயணிகள் எதிர்பார்த்த எண்ணிக்கையில் பயணம் செய்வதில்லை. மொனோ ரயிலில் ஒரு மணி நேரத்தில் ஒரு மார்க்கத்தில் மட்டும் 7,000 பேர் பயணம் செய்யலாம். நாள் ஒன்றுக்கு 1.5 முதல் 2 லட்சம் பேர் வரை பயணம் செய்யலாம். 2008ம் ஆண்டு தயார் செய்யப்பட்ட அறிக்கையில் 2031ம் ஆண்டளவில் 1.5 லட்சம் பேரும், 2041ம் ஆண்டு 3 லட்சம் பேரும் மோனோ ரயிலில் பயணம் செய்வார்கள் என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால் புறநகர் ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்களுடன் இணைப்பு இல்லாத காரணத்தால் எதிர்பார்த்தபடி மோனோ ரயிலில் பயணிகள் அதிக எண்ணிக்கையில் பயணம் செய்வதில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே புறநகர் ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்களுடன் மோனோ ரயில்களை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன் மூலம் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் கூறினர்.இதன் இடையே செம்பூர்-சாந்த் கட்கே மகாராஜ் சவுக் இடையே இயக்குவதற்காக புதிதாக 10 மோனோ ரயில்கள் வாங்கப்படுகின்றன. முதல் ரயில் 2023ம் ஆண்டு ஜனவரி மாதமும், இரண்டாவது ரயில் 2014ம் ஆண்டு ஜனவரி மாதமும் வந்து சேரும். உள்நாட்டில் தயாரிக்கப்படும் புதிய ரயில்கள் மெட்ரோ ரயில்களை போல ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் தயாராக்கப்படுவதால் இப்போது இருக்கும் ரயில்களை விட எடை குறைவாகவும், அதே நேரத்தில் அதிக பலம் உள்ளதாகவும் இருக்கும். இப்போதுள்ள ரயில்களை விடவும் கூடுதல் பயணிகளை ஏற்றிச் செல்லும். 10 ரயில்களும் வந்து சேர்ந்த பின்னர் 5 நிமிடங்களுக்கு ஒரு மோனோ ரயில் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.