தாயை தாக்கிய குடிகார தந்தையை சுத்தியலால் அடித்து கொன்ற மகன் கைது: தகிசரில் பயங்கரம்

மும்பை:  தகிசர் கிழக்கு, கோகனிபாடா, சித்திவினாயக் நகரில் உள்ள குடிசை பகுதியை சேர்ந்தவர் அன்னாராவ் பன்சோடே(60). இவரது மனைவி ஜெயமாலா. இவர்களுக்கு அமோல் பன்சோடே(28) மற்றும் சந்தீப் பன்சோடே(25) ஆகிய இரு மகன்கள் உண்டு. அன்னாராவ் கூலி வேலை பார்த்து வந்தார். அமோல் பன்சோடே கூரியர் டெலிவரி பாயாக வேலை செய்து வருகிறார். இளைய மகன் சந்தீப் பன்சோடே டிரைவராக வேலை பார்க்கிறார். அன்னாராவ் குடிப்பழக்கம் உள்ளவர். அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்வார். மனைவியை அடிக்கவும் செய்வார். இதை அவருடைய மூத்த மகன் அமோல் பன்சோடேயும் ஒப்புக்கொண்டார். சம்பவத்தன்று இரவு 7 மணியளவில் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த அன்னாராவ் காஸ் அடுப்பை பற்ற வைத்தார்.

பின்னர் சுத்தியலால் மொசைக் தரையை அடித்து உடைத்தார். இதை தடுக்க முயன்ற மனைவி ஜெயமாலாவையும், தாக்கினார். உடனே ஜெயமாலா இளைய மகன் சந்தீப் மன்சோடேவுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். உடனே வீட்டுக்கு விரைந்து வந்த சந்தீப் பன்சோடே தாயை அடிக்கவிடாமல் தந்தையை தடுத்தார். இதனை தொடர்ந்து தந்தைக்கும் மகனுக்கும் இடையே அடிதடி ஏற்பட்டது. அப்போது சந்தீப் பன்சோடே கோபத்தில் தந்தையை கத்தியால் குத்தினார். மேலும் சுத்தியலால் அடித்தார். இதில் படுகாயம் அடைந்த அன்னாராவ் சம்பவ இடத்தில் சுறுண்டு விழுந்து இறந்துவிட்டார். இது பற்றி தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த தகிசர் போலீசார் சந்தீப் பன்சோடேயை கைது செய்தனர். பின்னர் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: