கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்… டாக்டர் பத்மபிரியா

நன்றி குங்குமம் தோழி

வாழ்வென்பது பெருங்கனவு!

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தங்களுக்கான லட்சியத்தையே கனவாகக் கொண்டு பயணித்துக் கொண்டிருப்பார்கள். அந்த வகையில் பெண்

களுக்கு சுகப்பிரசவமே அதிகம் இருக்க வேண்டும், பெண்கள் அனைவருக்கும் தாய்மை அமையும் வகையில் விஞ்ஞானம் வளர வேண்டும் என்ற தனது லட்சியத்தில் குறிக்கோளுடன் இருந்து இன்றைக்கு கிளெனீகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையின் மகப்பேறியல் பெண்நோயியல் மற்றும் செயற்கை கருத்தரித்தல் துறைத் தலைவர் டாக்டர் பத்மபிரியாவிவேக், பன்னிரண்டா யிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு பிரசவம் பார்த்துள்ளார். அதில் சிக்கலான சூழலிலும் தனது திறமையால் 90 சதவிகிதம் சுகப்பிரசவங்களாக மாற்றி வெற்றிக் ெகாண்டிருக்கும் கதையை நம்மோடு

பகிர்ந்துகொள்கிறார்.

 ‘‘சென்னை தேனாம்பேட்டையில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தேன். மருத்துவராக வேண்டும் என்பதே என் சிறுவயதுலட்சியக் கனவாக இருந்தது. அதற்காக படிப்பில் முழு கவனம் செலுத்தி படித்து வந்தேன். நான் நினைத்தபடி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. படிக்கும்போதே குழந்தையில்லாமல் வரும் பெண்களை பார்க்கும்போதும், அதனால் அவர்கள் படும் வேதனைகளையும் மனதில் கொண்டு மேற்படிப்பும் பெண் நோயியல் குறித்து வெளிநாடு சென்று படித்து வந்தேன்.

சென்னை திரும்பி வந்து வேலையில் சேர்ந்தபோது எனக்கு செக்கரட்டரியாக இருந்த பெண்ணுக்கு கர்ப்பப்பை இல்லாமல்அவர் படும் அவஸ்தைகளை பார்த்தேன். இதற்கெல்லாம் தீர்வு காண வேண்டும் என பல்வேறு வகையிலும் முயற்சி எடுத்தேன்’’ என்றவர் இன்றைக்கும் ஏராளமான பெண்களுக்கு சுகப்பிரசவமே பார்த்து வருகிறார்.

‘‘உலக அளவில் 4500 பெண்களில் ஒருவர் கர்ப்பப்பை இல்லாமல் பிறக்கின்றனர். மேயர் ரோகிடான்ஸ்கிகுஸ்டர் ஹாசர் சிண்ட்ரோம் ((MRKH - Mayer Rokitansky Kuster Hauser Syndrome) எனப்படும் இந்தக் குறைபாடு என்பது பெண்களுக்கு இனப்பெருக்க அமைப்பை பாதிக்கும் ஒரு பிரச்னையாகும்.இது ஒரு பன்முக மரபணு நோய்க்கான அறிகுறி. இனப்பெருக்க  அமைப்பு நோயால் பாதிக்கப்படும் பெண்களும் கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற முடியும்.

மாதவிடாய் என்பது பெண்கள் பருவமடைதல் மாற்றத்தின் ஒரு முக்கியமான நிகழ்வாகும். இது ஒரு உடல் மற்றும் உணர்வு சார்ந்த ஆரோக்கியத்தின் ஒன்றாக பார்க்கப்படுகிறது. குறித்த நேரத்தில் மாதவிடாய் வருவது நியூரோ எண்டோகிரைன் இனப்பெருக்க அமைப்பு இயல்பாக செயல்படுகிறது என்பதை காட்டுவதோடு, பருவமடைதலின் பிற உடலியல் மாற்றங்கள் இயல்பு நிலையில் முன்னேறுகிறது. பிரைமரி அமினோரியா என்பது பூப்படைதல் ஏற்படாததை குறிக்கிறது. இதன் மதிப்பீடு செய்யப்பட்ட நிகழ்வு 0.1 - 0.3 சதவீதமாகும்.முதல் பூப்படைதல் என்பது, மார்பக வளர்ச்சி ஏற்பட்ட மூன்றாண்டுக்குள், ஏறக்குறைய 12 முதல் 13 வயதில் ஏற்படுகிறது.

அந்த பெண்களுக்கு 15 வயதில் 98 சதவீதம் மாதவிடாய் ஏற்படும். இயல்பான இடைநிலை பாலியல் பண்புகள் இருக்கும்போது 15 வயதில் முதல் பூப்படைதல் ஏற்படாமல் இருந்தாலோ, 13 வயதில் மார்பக வளர்ச்சி இல்லாதிருப்பதுடன் முதல் பூப்படைதல் ஏற்படாமல் இருந்தாலோ டாக்டரை அணுகி இதுகுறித்து கலந்தாலோசனை செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘குறிப்பிட்ட காலத்தில் பூப்படையாமல் இருக்கும்பட்சத்தில், அந்தப் பெண்ணின் பருவமடைதல் மாற்றங்களின் காலவரிசை குறித்து பரிசோதனை செய்ய வேண்டும். மார்பக வளர்ச்சி, அந்தரங்க பகுதியில் முடி வளர்ச்சி போன்ற இடைநிலை பாலியல் பண்புகள் உள்ளிட்ட பிறப்புறுப்பு பரிசோதனையைஉள்ளடக்கிய உடல் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். மேலும் கர்ப்பப்பை இருக்கிறதா, இல்லையா என்பதை கண்டறிய அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்ய வேண்டும்’’ என்றவர் சிண்ட்ரோம் பிரச்னை பற்றி விவரித்தார்.

‘‘மேயர் ரோக்கிடான்ஸ்கி கஸ்டர் ஹவுசர் சிண்ட்ரோம் என்பது பெண்களுக்கு இனப்பெருக்க அமைப்பை பாதிக்கும் ஒரு பிரச்னையாகும். இனப்பெருக்க அமைப்பு பாதிப்பு தொடர்பான நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு இயல்பாக செயல்படும்சினைப்பை மற்றும் பாலியல் ஹார்மோன் வளர்ச்சிகள் இருக்கும். ஆனால் கர்ப்பப்பை இல்லாத காரணத்தால் மாதவிடாய் இருக்காது.

இதன் காரணமாக  அவர்களால் கர்ப்பம் தரிக்க இயலாது. இருந்த போதிலும்  அவர்களுக்கு பெண் குரோமோசோம் மாதிரி மற்றும் பெண் இடைநிலை பாலியல் பண்புகள் இருக்கும். இந்த நோய் அறிகுறியை பருவமடைதலுக்கு முன்பு கண்டறிவது என்பது மிகுந்த சிரமமாகும். இதை 16 வயதிலும் மாதவிடாய் இல்லாமல் இருக்கும் போது மட்டுமே கண்டறிய முடியும். சிலருக்கு, சிறுநீரகங்கள் இயல்புக்கு மாறாக பெரிதாக இருக்கும் அல்லது ஒரு சிறுநீரகம் இல்லாமல் இருக்கும்.

இதனுடன் எலும்பு இயல்பு மாற்றங்கள், இதய மற்றும் நுரையீரல் குறைபாடுகள், காது பிரச்சனை போன்றவையும் இருக்கலாம். அல்ட்ரா சவுண்ட் அல்லது எம்.ஆர்.ஐ ஸ்கேன் ஆகிய பரிசோதனை மூலம் இவற்றை கண்டறியலாம். அவ்வாறு கர்ப்பப்பை இல்லாமல் இருக்கும் பெண்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தைகளை பெற்று வருகின்றனர். ஆனால் இதற்கான தீர்வு கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் கிடைத்துள்ளது. கர்ப்பப்பை இல்லாத பெண்கள் இந்த கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் தானே குழந்தைகளை பெறமுடியும்’’ என்று தெரிவித்தார்.

‘‘கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை என்பது கருவுறாமல்இருக்கும் பெண்களுக்கான ஒரு சிறந்த தீர்வாகும். இந்த சிகிச்சையின் மூலம் அந்தப்பெண்கள் தங்கள் குழந்தைகளை தானே பெற்றுக் கொள்ள முடியும். சாதாரண கர்ப்பப்பை மற்றும் ஆரோக்கியமான பிறப்புறுப்பு உள்ள பெண்களுக்கு இனப்பெருக்க அமைப்பு நோய் மற்றும் மாதவிடாய் இல்லாது இருந்தால் அவர்களுக்கு இந்த சிகிச்சை சிறந்த தீர்வாகும். கர்ப்பம் அடைவதற்கான நிலையான திட்டமிடலில் இருக்கும் பெண்களுக்கும், மேலும் செயற்கை கருத்தரித்தல் மேற்கொள்ள விரும்பும் பெண்களுக்கும் இது ஒரு சிறந்த மாற்று வழியாகும்.

இந்த கர்ப்பப்பை உயிருடன் உள்ளவர் ஒருவரிடம்இருந்தோ அல்லது இறந்தவரிடம் இருந்தோ பெறப்பட்டு பொருத்தப்படும். சரியான கர்ப்பப்பை பொருத்துவதற்கு முன், அதுகுறித்து பல்வேறு பரிசோதனை செய்யப்படும். அவ்வாறு பெறப்படும் கர்ப்பப்பை அவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் ஒப்புதலுடன் பொருத்தப்படும்’’ என்றவர், கர்ப்பப்பை தானம் கொடுப்பவரை எவ்வாறு தேர்வு செய்வது என்பது பற்றி விளக்கினார்.

‘‘கர்ப்பப்பை தானம் கொடுப்பவருக்கு 40 வயது முதல் 60 வயது வரை இருத்தல் வேண்டும். அந்தப் பெண் குழந்தை பெற்றவராக இருக்க வேண்டும்.40 வயதிற்கு குறைவாக இருக்கும் பெண்ணாக இருக்கும்பட்சத்தில் அவர் குழந்தை பிரசவித்தவராகவும் கருத்தடை செய்து கொண்டவராகவும் இருக்க வேண்டும்.

இரண்டுக்கு மேற்பட்ட சிசேரியன் செய்யாத பெண்ணாக இருக்க வேண்டும். ஒரு பெண் தான் உருவான தாயின் கர்ப்பப்பையை தானமாக பெறும்பட்சத்தில் தனது குழந்தையையும் அதே கர்ப்பப்பையின் மூலம் உருவாக்க முடியும். கர்ப்பப்பை இல்லாமல் பிறந்த பெண்கள் குழந்தைப்பேறு பெறுவதற்கு, அவர்கள் பிறப்புறுப்பில் தொற்று நோய் பாதிப்பு இல்லாமல் இருக்கும்பட்சத்தில் கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளை பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ முடியும்.

குழந்தை இல்லை என்ற குறை இனிமேல் யாருக்கும் இருக்கக்கூடாது. அவ்வாறு குழந்தைப்பேறு என்பது பெரும்பாலும் சுகப்பிரசவமாகவே இருக்க வேண்டும்’’ என்ற அக்கறையுடன் பேசி முடித்தார்

டாக்டர் பத்மபிரியா விவேக்.

தோ.திருத்துவராஜ்

Related Stories: