×

லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்துவிட்டதால் அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் எஸ்.பி.வேலுமணி பதில் மனு

சென்னை: லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்துள்ளதால் அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். முந்தைய அதிமுக ஆட்சியில், சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடுகள் குறித்து முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரியும் அறப்போர் இயக்கம் சார்பிலும், திமுக சார்பிலும் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், ஐ.பி.எஸ். அதிகாரி பொன்னி தலைமையில் குழு அமைத்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் 129 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தி 1132 ஆவணங்களை ஆராய்ந்து தாக்கல் செய்த அறிக்கையில் வழக்குபதிவு செய்ய ஆரம்பகட்ட முகாந்திரம் ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் அரசும் வழக்கை கைவிட முடிவு செய்திருந்தது.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அறப்போர் இயக்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் எஸ்.பி வேலுமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்துள்ளார், அதில் இந்த வழக்கில் முகாந்திரம் இல்லை எனக்கூறி அரசால் கைவிட முடிவெடுக்கப்பட்ட நிலையில் தற்போது லஞ்ச ஒழிப்புதுறை சார்பில் வழக்கும் பதிவு செய்யப்பட்டு விட்டதால் அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கு செல்லத்தக்கதல்ல. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.  உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை தனக்கு வழங்க வேண்டுமெனவும் கோரியுள்ளார்.   

அந்த மனுவில், நாளிதழில் விளம்பரம் வெளியிடுவதில் தொடங்கி மாநகராட்சி டெண்டர்கள் முழுக்க முழுக்க வெளிப்படைத்தன்மையோடு ஒளிவுமறைவற்ற முறையில்  விதிகளுக்கு உட்பட்டு தான் வழங்கப்பட்டது. டெண்டர் ஒதுக்கீட்டிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த வழக்கில் எந்த வகையிலும் தொடர்பில்லாத அறப்போர் இயக்கம் டெண்டர் கிடைக்காதவர்களுக்கு நிழலாக இருந்து இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர்.  அதிமுக கட்சியின் பெயரையும் களங்கப்படுத்த வேண்டுமென்ற ஒரே நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையை சாதகமாக்கி, முடிந்து போன விசாரணையை மீண்டும் தொடங்க முடியாது. அமைச்சராக இல்லாத நிலையில் வழக்கின் விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்க தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் அக்டோபர் 20ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Tags : SB ,Velumani ,High Court , Anti-Corruption Department, Case Registration, SB Velumani, Petition
× RELATED ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர்...