காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அனைத்து ஒன்றியங்களிலும் திமுக அசத்தல் வெற்றி

காஞ்சிபுரம்: ஊரக உள்ளாட்சி தேர்தலில், 2 மாவட்ட கவுன்சிலர், 13 ஒன்றிய கவுன்சிலர் இடங்களை பிடித்து, காஞ்சிபுரம் ஒன்றியத்தை திமுக கைப்பற்றியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 கட்டங்களாக நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் காலை தொடங்கியது. காஞ்சிபுரம் ஒன்றியத்தை சேர்ந்த வாக்குகள் காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட்டன. இதில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 1 மற்றும் 9 ஆவது மாவட்ட ஊராட்சிக்குழு வார்டு உறுப்பினர்களுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மாவட்ட ஊராட்சிக்குழு 1வது வார்டில் திமுக சார்பில் நித்யா சுகுமார், அதிமுக சார்பில் லலிதா பாய் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

இதில் திமுக சார்பில் போட்டியிட்ட நித்யா சுகுமார், அதிமுக வேட்பாளர் லலிதா பாயை விட 15,981 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். நித்யா சுகுமார் 26,590 வாக்குகளும், லலிதா பாய் 10,609 வாக்குகளும் பெற்றனர். தொடர்ந்து  திமுக வேட்பாளர் நித்யா சுகுமார் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வெற்றி சான்றிதழை பெற்றார். இதேபோல் 9வது மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வனிதா மகேந்திரன் வெற்றிபெற்றார். அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் விஜயா உலகநாதனை விட 5,363 வாக்குகள் அதிகம் பெற்றார். வனிதா மகேந்திரன் 15,817 வாக்குகளும், விஜயா உலகநாதன் 10,454 வாக்குகளும் பெற்றனர். தொடர்ந்து வனிதா மகேந்திரன் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் இருந்து வெற்றிச் சான்றிதழை பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வின்போது திமுக ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், க.குமணன், மாவட்ட பிரதிநிதி எம்.எஸ்.சுகுமார் உள்பட பலர் இருந்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட 11 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களும் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. காஞ்சிபுரம் ஒன்றியத்தின்  18 ஒன்றிய கவுன்சிலர்களுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக கூட்டணி 13 இடங்களையும், அதிமுக 2 இடங்களிலும், பாமக, பாஜ தலா 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

திமுக சார்பில் 1வது வார்டில் போட்டியிட்ட மேனகா இளஞ்செழியன், 2வது வார்டு வளர்மதி மனோகரன், 4வது வார்டு பாலாஜி, 9வது வார்டு மலர்க்கொடி குமார், திமுக கூட்டணி விசிக சார்பில் 12வது வார்டில் போட்டியிட்ட ரேகா ஸ்டான்லி ஆகியோர் வெற்றிபெற்றனர். மேலும், 3வது வார்டில் பாமக சார்பில் போட்டியிட்ட ரமேஷ், 11வது வார்டில் பாஜ வேட்பாளரும் வெற்றி பெற்றனர். மொத்தத்தில் 18 ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் திமுக 13 இடங்களையும், அதிமுக 2, பாமக 2, பாஜக 1 இடத்தையும் கைப்பற்றியது.

உத்திரமேரூர்: உத்திரமேரூரில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை திருப்புலிவனம் அரசு கலை கல்லூரியில் நேற்று முன்தினம் காலை துவங்கியது. இதில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 2 பேர் பேட்டியிட்டனர். அதில் 10வது வார்டில் திமுகவை சேர்ந்த பத்மாபாபு 9913 வாக்குகள்  அதிகம்   பெற்று வெற்றி பெற்றார். 11வது வார்டில் திமுக சார்பில் சிவராமன் 10131 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதேபோல், 22 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு திமுக சார்பில் போட்டியிட்ட 1வது வார்டு ருத்திரகோட்டி, 2வது வார்டு திருமலை, 3வது வார்டு அண்ணாதுரை, 6வது வார்டு வீரம்மாள், 7வது வார்டு சுகுணாசுந்தர்ராஜன், 9வது வார்டு ஹேமலதா, 10வது வார்டு கலைச்செல்வி, 11வது வார்டு பானுமதி, 12வது வார்டு ஞானசேகரன், 13வது வார்டு அன்புராஜ், 15வது வார்டு பவுன், 16வது வார்டு துரைவேல், 17வது வார்டு சுப்பரமணி, 18வது வார்டு சந்திரன், 19வது வார்டு கல்யாணசுந்தரம், 20வது வார்டு நதியா, 21வது வார்டு வசந்திகுமார், 22வது வார்டு சேகர் ஆகியோர் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அதிமுக சார்பில் 4வது வார்டு ராமச்சந்திரன், 5வது வார்டு ரேவதிரஞ்சித், 8வது வார்டு மகேஸ்வரி, திமுக கூட்டணி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் 14வது வார்டு தீபா ஆகியோர் வெற்றி பெற்றனர். கூட்டணி கட்சிகளாக  மொத்தம்  திமுக - 18, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 1, அதிமுக - 3 கவுன்சிலர்களும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இந்த தேர்தலில், போட்டியிட்டு  வெற்றி பெற்ற 22 வேட்பாளர்களுக்கும்  தேர்தல் அலுவலர் தங்கராஜ் சான்றிதழ்களை வழங்கினார். முன்னதாக திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனைவரும்  உத்திரமேரூர், சாலவாக்கம், பெருநகர் ஆகிய பகுதிகளில் உள்ள தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் காலை தொடங்கி நேற்று காலை வரை நடத்தப்பட்டது. ஒன்றியத்தில் உள்ள 43 ஊராட்சிகளில் மேல்மருவத்தூர், தண்டலம் ஆகிய ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 41 ஊராட்சிகளுக்கு வாக்கு எண்ணும் பணி நடந்தது. வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரம் உடனுக்குடன் அறிவிக்கப்பட்டன.

மேலும், 16 ஒன்றிய கவுன்சிலர் வார்டுகள் அடங்கிய சித்தாமூர் ஒன்றியத்தில் திமுக 10 இடங்களிலும், அதிமுக 3, விசிக 2, காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. இதுதவிர, மாவட்ட ஊராட்சி 16வது வார்டு உறுப்பினர் தேர்தலில் திமுகவை சேர்ந்த சாந்தி ரவிக்குமார், 14வது வார்டில் குணசேகரன் ஆகியோர் வெற்றி பெற்றனர். லத்தூர் ஒன்றியத்தின் 41 ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 15 வார்டுகளில் ஒன்றிய கவுன்சிலர்கள் திமுகவை சேர்ந்த 10 பேர், அதிமுகவில் 5 பேர் வெற்றி பெற்றனர். மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ஜெயலட்சுமி வெற்றி பெற்றார்.

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தின் 1வது வார்டு ஹேமாவதி (திமுக), 2வது வார்டு தியாகராஜன் (சுயே), 3வது வார்டு சாந்தகுமாரி (அதிமுக), 4வது வார்டு சத்யா (அதிமுக), 5வது வார்டு செந்தில்ராஜன் (அதிமுக), 6வது வார்டு நிஷாந்த் (அதிமுக), 7வது வார்டு எல்லம்மாள் (சுயே), 8வது வார்டு கருணாநிதி (திமுக), 9வது வார்டு உஷா (திமுக), 10வது வார்டு ஆண்டனி வினோத்குமார் (திமுக), 11வது வார்டு வானிஸ்ரீ (காங்), 12வது வார்டு யுவராணி (அதிமுக), 13வது வார்டு மல்லிகா (திமுக), 14வது வார்டு மாலதி (திமுக), 15வது வார்டு கோமதி (திமுக) ஆகியோர் வெற்றி பெற்று, அதற்கான சான்றிதழ்களை பெற்றனர். 2 மாவட்ட கவுன்சிலர்களில் 3வது வார்டு குண்ணம் ராமமூர்த்தி (திமுக), 4வது வார்டு பாலா (எ) பால்ராஜ் (திமுக) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

மதுராந்தகம்: மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள 4 மாவட்ட வார்டு உறுப்பினர் பதவிகளை திமுக கைப்பற்றியது. மதுராந்தகம், 9வது வார்டில் செம்பருத்தி துர்கேஷ், 12வது வார்டு ராஜா ராமகிருஷ்ணன், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் 10வது வார்டு மாலதி, 13வது வார்டு வசந்தா கோகுலக்கண்ணன் ஆகியோர் வெற்றிபெற்றனர். இவர்கள், அனைவரும் திமுகவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தின் மொத்தமுள்ள 18 இடங்களில் 13 இடங்களை திமுக, அதிமுக 4, பாஜ 1 வெற்றி பெற்றுள்ளன. இதையொட்டி, இங்கு திமுக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுள்ளது.

* திமுக - அதிமுக கடும் போட்டி

மதுராந்தகம் ஒன்றியத்தின் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் காலை துவங்கியது. முடிவில், 22 மதுராந்தகம் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், திமுக 10 வார்டுகளிலும், அதன் கூட்டணி கட்சியான விசிக 1, அதிமுக 7 வார்டுகளிலும், கூட்டணி பாஜ 1 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன. மேலும், 3 சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். மொத்தம் உள்ள 22 வார்டுகளில், 2 கூட்டணி கட்சிகளும் ஒன்றிய குழு தலைவர் பதவியை கைப்பற்றுவதற்கான பெரும்பான்மை வாக்கு இல்லாத நிலையில், சுயேச்சைகளின் ஆதரவு தற்போது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய தலைவரை தேர்வு செய்ய, 4 சுயேச்சைகள் யாருக்கு ஆதரவு அளிப்பார்கள் என்பது முக்கியம். அவர்கள் யாருக்கு ஆதரவு கொடுக்கிறார்களோ, அவர்களே ஊராட்சி ஒன்றிய தலைவராக தேர்வு செய்யப்படுவார்கள். இதையொட்டி, ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு திமுக - அதிமுக இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

* விடியவிடிய நடந்த வாக்கு எண்ணிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 கட்டங்களாக நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் காலை தொடங்கியது. காஞ்சிபுரம் ஒன்றியத்தை சேர்ந்த வாக்குகள் காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட்டன. இதில் காஞ்சிபுரம் ஒன்றியத்தின் 1 மற்றும் 9வது மாவட்ட ஊராட்சிக்குழு வார்டு மற்றும் 18 ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர்களுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதில், முறையாக பயிற்சி அளிக்கப்படாத ஊழியர்கள், எண்ணும் பணியில் ஈடுபட்டதால், விடிய விடிய நடந்த வாக்கு எண்ணிக்கை பணிகள் அதிகாலை 5 மணியளவில் முடிவடைந்தது.

Related Stories: