இண்டியன் வெல்ஸ்: பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரெங்கா தகுதி பெற்றார். 4வது சுற்றில் சக வீராங்கனை அலெக்சாண்ட்ரா சாஸ்னோவிச்சுடன் (27 வயது, 100வது ரேங்க்) மோதிய அசரெங்கா (32 வயது, 32வது ரேங்க்) 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 1 மணி, 31 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு 4வது சுற்றில் அமெரிக்காவின் ஷெல்பி ரோஜர்சுடன் (29 வயது, 44வது ரேங்க்) மோதிய கனடாவின் லெய்லா பெர்னாண்டஸ் 6-2, 1-6, 6-7 (4-7) என்ற செட் கணக்கில் 2 மணி, 34 நிமிடம் போராடி தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் தனது 4வது சுற்றில் 6-4, 6-1 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் அய்லா டாம்யானவிச்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.